கேரளா ஆளுநர் ஆகிறார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா?
Posted on 20/04/2022
தமிழக பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜா கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான தமிழிசை சவுந்திரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராகவும் உள்ளார். மற்றொரு மூத்த தலைவரான இல.கணேசன் வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் ஆளுநராக உள்ளார்.
இதனிடையே தெலங்கானா முதலமைச்சருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் தமிழிசை சவுந்திரராஜனை அம்மாநில ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் மட்டும் தொடர வைக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேரள ஆளுநராக உள்ள ஆரிப் முகமது கான் தெலங்கானா மாநிலத்திற்கு மாற்றப்படலாம் என தெரிகிறது.
இந்த நிலையில் தான் ஹெச்.ராஜா கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் பாஜக தலைமை ஹெச்.ராஜாவை டெல்லிக்கு வரவழைத்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை பூர்வீகமாகக் கொண்ட ஹெச்.ராஜா அதிரடி அரசியலுக்கு பெயர்போனவர். 1989-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த ஹெச்.ராஜா 2001-ம் ஆண்டு காரைக்குடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.வாக தேர்வு செய்யப்பட்டார். அந்த தேர்தலில் பாஜக திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது.
இதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். மேலும், 2021 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் காரைக்குடியில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
Tags: News