அலங்காநல்லூரில் நாளைக்கு ஜல்லிக்கட்டு! அவசர சட்டத்திற்கு ஒப்புதல்!
Posted on 21/01/2017
ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக இயற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு இன்று குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்குவார் என்றும், நாளை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு தேவையான அம்சங்களை கொண்ட சட்ட முன் வரைவை தமிழக அரசு உருவாக்கி, முதலில் அந்த அவசர சட்ட முன் வடிவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுத்தது. அதை பரிசீலித்த ராஜ்நாத்சிங் கையொப்பமிட்டு ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து அந்த சட்ட முன் வடிவு சட்ட அமைச்சகத்துக்கும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த 2 அமைச்சகங்களும் தமிழக அரசின் சட்ட முன் வடிவை அப்படியே ஏற்றுக்கொண்டு அளித்தன. மத்திய அரசின் மூத்த வக்கீல் அட்டர்னி ஜெனரல் முகுல்ரோத்கியும் தனது பரிந்துரைகளை தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவைகளின் ஒப்புதலைத் தொடர்ந்து அந்த அவசரச் சட்ட முன் வடிவு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மேலும் நேற்றிரவே அந்த அவசரச் சட்டத்துக்கான கோப்பு தமிழ்நாட்டுக்கும் வந்து சேர்ந்தது. இனி அந்த கோப்பில் ஆளுநர் கையொப்பமிட வேண்டும். இதையடுத்து, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வர உள்ளார்.
அதன் பிறகு அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார். இதையடுத்து அவர் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தில் கையொப்பமிடுவார் என தெரிகிறது. எனவே இன்று இரவு அவசர சட்டம் வெளியாகும் என தெரிகிறது. இதையடுத்து, அரசு சார்பில் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை அலங்காநல்லூரில் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேற்று ஆய்வு செய்தார்.
இன்று மாலை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மதுரை செல்கிறார். அரசின் இந்த நடவடிக்கைகள் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறும் என்பதை உறுதி செய்கின்றன. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே அளித்த பேட்டியில் கூறியபடி, வாடி வாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி வரும். இதன் வெற்றியை தங்களுக்கு உரித்தாக்கி கொள்ளும்வகையில், முதல்வரே போட்டியை நேரடியாக தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: News, Madurai News, Art and Culture