6 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை!
Posted on 30/06/2017
அமெரிக்காவில் நுழைய 6 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்கும் புதிய சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஈரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பெரும் கெடுபிடிக்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்க அதிபர் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட நாள் முதலே டொனால்ட் ட்ரம்ப் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஹிலாரியை தோற்கடித்த ட்ரம்ப் புதிய அதிபராக கடந்த ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். இதைடுத்த இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கையை அவர் அதிரடியாக மேற்கொண்டார். அகதிகள் நுழைவதை தடுக்க மெக்ஸிகோ எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் எழுப்ப அவர் உத்தரவிட்டார்.
இது அமெரிக்கா - மெக்ஸிகோ நாடுகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இருநாட்டு உறவுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் 6 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடைவிதித்தார். அமெரிக்காவில் சட்டத்திற்கு விரோதமாக உள்ள அகதிகளை வெளியேற்றவும் அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி ஈரான், சூடன், ஏமன், சோமாலியா, சிரியா மற்றும் லிபியா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் அமெரிக்காவுக்குள் நுழை தடை விதித்தார். இந்தச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு இந்தச்சட்டம் இன்று அமல்படுத்தப்பட்டது.
டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய பயண தடை அமலாகியுள்ள நிலையில், ஆறு பிரதான இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மற்றும் அனைத்து அகதிகளும் தற்போது கடுமையான நுழைவு விதிகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்க விசா வேண்டி விண்ணப்பித்தால், அவர்களது பெற்றோர், வாழ்க்கை துணைவர் அல்லது துணைவி, குழந்தை, மகன், மகள், மருமகன், மருமகள், உடன்பிறந்தவர்கள் ஆகிய உறவுகளில் ஒருவர் அமெரிக்காவில் இருப்பதை நிரூபித்தாக வேண்டும் என புதிய விதி போடப்பட்டுள்ளது.
இந்த தடையின் கீழ், அகதிகள் மற்றும் குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள், அமெரிக்காவில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது வணிக ரீதியாக தொடர்புகள் இல்லாமல் இருந்தால், அமெரிக்காவுக்குள் நுழைய விசா மறுக்கப்படலாம் அல்லது அவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
Tags: News, Madurai News