சாப்பிட போயிட்டு வர்றதுக்குள்ள டிவியில தள்ளுபடின்னு போடுறாங்க - விஷால்!
Posted on 05/12/2017
சனிக்கிழமையன்று ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிடப் போவதாக அறிவித்த நாளில் இருந்தே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் களம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால் அரசியல் களத்திலும் இறங்கினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட திங்கட்கிழமை மனு தாக்கல் செய்தார் விஷால்.
எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத அளவிற்கு 145 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியதில் இருந்தே பரபரப்புடன் காணப்பட்டது தேர்தல் அலுவலகம். மதியம் விஷாலின் மனு பரிசீலனைக்கு வந்த போதே திமுக, அதிமுக வேட்பாளர்களின் ஆட்சேபத்தினால் மனு நிறுத்தி வைக்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு மேல் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டது. ஆடியோ ஆதரத்தை கொடுக்கவே மனு ஏற்கப்பட்டதாக கூறப்பட்டது. இதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு சாப்பிட போனார் விஷால். ஆனால் சிறிது நேரத்தில் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிப்பு ஒட்டப்பட்டது. மொத்தத்தில் நேற்று செத்து செத்து விளையாடினர் அதிகாரிகள்.
இது விஷாலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விஷால், என்ன நடக்குதுன்னு தெரியலையே. மனு ஏற்புன்னு சொன்னாங்க... வீட்டுக்கு போய் சாப்பிட போனா ரிஜெக்ட்னுன்னு வருது. பத்து நிமிஷத்துல வர்றேன்னு சொல்லி ஓடி வந்தா கையெழுத்து போலின்னு சொல்றாங்க. நிரூபிக்க நேரம் கொடுக்கலாம்ல என்றார்.
நான் காஸ்மோபாலிடன் கிளப்ல போட்டி போடலை. பை எலக்சன்ல நிக்கறேன். அதுக்கு கூட ஜனநாயகத்தில இடமில்லை. விஷாலான எனக்கே இப்படின்னா? சாதாரண மக்களுக்கு கேட்கவே வேண்டாம். எந்த அளவிற்கு மிரட்டுவாங்க என்று கேட்டுள்ளார் விஷால்.
Tags: News, Hero, Star