சர்வதேச திரைப்பட விழாவில் பரபரப்பு: 2 பெண்கள் உட்பட 12 பேர் கைது
Posted on 13/12/2016
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் 21வது சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் பங்கேற்று திரைப்படங்களை கண்டு ரசிக்க பல நகரங்களில் இருந்தும் ரசிகர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில், திரைப்பட விழாவில் திரைப்படம் ஒன்று திரையிடப்படும்போது, ஒலிபரப்பப்பட்ட தேசிய கீதத்தின்போது, சிலர் எழுந்து நிற்கவில்லையாம். போலீசாரின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் அவர்கள் அமர்ந்தே இருந்துள்ளனர்.
இதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்கவில்லை என கூறி 2 பெண்கள் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். இன்று அவர்கள் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளனர். அவர்கள் மீது, ஐ.பி.சி. பிரிவு 188ன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும், அப்போது மாற்றுத்திறனாளிகளை தவிர்த்து பிறர் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது கட்டாயம் என்றும், கடந்த மாதம் 30ம் தேதி சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசத்தின் மீதான மரியாதையை எழுந்து நின்றுதான் காட்ட வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை என கைது செய்யப்பட்டவர்கள் கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.
Tags: News, Lifestyle, Art and Culture