நடிகையை கொன்ற தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
Posted on 27/05/2022
ஜம்மு காஷ்மீரின் புட்காம் பகுதியில் டிவி நடிகை அம்ரீன் பட் கடந்த புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரை கொலை செய்த 2 தீவிரவாதிகள் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் ஐஜி விஜய் குமார், செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இருவரும் ஸ்ரீநகரின் சவுரா பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், இருவரையும் சுட்டுக்கொன்றனர்.
இதன்மூலம், அம்ரீன் பட் கொலையில் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாக விஜய் குமார் தெரிவித்தார்.
கஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 3 நாட்களில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 7 பேர் லஷ்கர் இ தொய்பா அமைப்பையும், 3 பேர் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பையும் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காஷ்மீரைச் சேர்ந்த டிவி நடிகையான அம்ரீன் பட் மற்றும் 10 வயதான அவரது உறவுக்கார சிறுமி ஆகியோர் மீது தீவிரவாதிகள் கடந்த புதன் கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், அம்ரீன் பட் உயிரிழந்த நிலையில், குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில், சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.