"முதல்வராகும் தகுதி மம்தாவுக்கு இல்லை" - திரிபுரா முதல்வர்!
Posted on 05/05/2021
மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 212 இடங்களில் வென்றது. பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்றது. திரிணாமூல் காங்கிரஸ் மிகப்பெரும் வெற்றியை பெற்றாலும் அக்கட்சியின் தலைவரும் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், நந்திகிராம் தொகுதியில் தோல்வியை தழுவியதால் தார்மீக அடிப்படையில் மம்தா பானர்ஜி முதல்வராகக் கூடாது என்று திரிபுரா முதல் மந்திரி பிப்லப் தேவ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்து விட்டார்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர் எப்படி முதல்வராக முடியும். திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வேறு ஒருவரே முதல்வர் பதவியில் அமர வேண்டும். முதல்வர் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை மம்தா இழந்து விட்டார்” என்றார்.