இந்தியா ஐ.நா.,வுக்கு கண்டனம்
Posted on 20/02/2021
மனித உரிமைகளுக்கான, ஐ.நா. துாதரக அலுவலகத்தின் இணைய தளத்தில், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அவற்றில் கூறப்பட்டிருந்ததாவது: ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, இந்தியா தன்னிச்சையாக ரத்து செய்து, புதிய சட்டங்களை அமல்படுத்திஉள்ளது. இதனால் அங்கு, முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினர், அரசியலில் பங்கேற்பது குறைந்துவிட்டது.இவ்வாறு, அவற்றில் கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து, வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஸ்ரீ வஸ்தவா நேற்று கூறியதாவது: ஜம்மு - காஷ்மீருக்கு, பல நாடுகளின் துாதர்கள் சமீபத்தில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வை சீர்குலைக்கும் நோக்கில் தான், இந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.ஜம்மு - காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மறந்து விட்டு, அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.ஜம்மு - காஷ்மீருக்கு, வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, பார்லிமென்ட் ஒப்புதலுடன் ரத்து செய்யப்பட்டதை, அறிக்கை வெளியிட்டவர்கள், வசதியாக மறந்துஉள்ளனர். பாரபட்சமான இந்த அறிக்கைகளை இந்தியா நிராகரிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.