டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் கைது
Posted on 31/05/2022
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறையினர் திடீரென கைது செய்துள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1.62 கோடி வரை பணமோசடி செய்ததாக மத்திய புலனாய்வுத்துறை வழக்குப்பதிவு செய்தது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியது. இந்த நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறையினர் இன்று திடீரென கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை ஆம் ஆத்மிக்கும், மத்திய அரசுக்கும் இடையே புதிய போரைத் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்யேந்தர் ஜெயின் இமாச்சலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தோல்வி பயத்திலேயே மத்திய அரசு அவரைக் கைது செய்துள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சத்யேந்தர் ஜெயின் இமாச்சலப் பிரதேசத்திற்குச் செல்ல முடியாமல் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு முற்றிலும் போலியானது என்பதால் இன்னும் சில நாட்களில் அவர் விடுதலை செய்யப்படுவார். எட்டு ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாத வழக்கில், தேர்தலைக் கணக்கில் கொண்டு சத்யேந்தர் ஜெய்ன் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
Tags: News