இளையராஜாவுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆதரவு!
Posted on 18/04/2022
மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மோடியை ஆதரித்ததால் இளையராஜாவை அவமதிப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முன்னுரையாக இளையராஜா எழுதியது சர்ச்சையை கிளப்பி வருகிறது. இளையராஜா தனது முன்னுரையில், 'பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.
அம்பேத்கரையும், மோடியையும் குறிப்பிட்டிருந்த இளையராஜாவின் கருத்து கடும் விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. இதில் பல்வேறு தரப்பினர் இளையராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இளையராஜா தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுததி வருகின்றனர்.அதேநேரம், பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் இளையராஜாவின் கருத்தை ஆதரித்துள்ளார்கள். இசைஞானியின் கருத்து, தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இளையராஜா, தான் சொன்னது சொன்னதுதான் என்றும் கருத்தை திரும்பப் பெற போவதில்லை என்றும் கூறியிருந்தார். மனதில் பட்டதை சொல்வதாகவும், யாரையும் மோடிக்கு ஓட்டுப் போடவும், வேண்டாம் எனவும் கூற மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, 'உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இளையராஜாவை அவமதிப்பதா? இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லை என்றால் விமர்சிப்பதா? இதுதான் ஜனநாயகமா?
ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எதிரான கருத்தை தெரிவித்தால் எதிர்ப்பதா? ஆதரவாக பேசவில்லை என்பதால் அவரை விமர்சிப்பது என்பது தவறான அணுகுமுறை.' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tags: News