உலகத்திலேயே உயரமான ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம்!
Posted on 09/12/2016
இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் கிருஷ்ணர் அவதரித்த மதுராவில் ஒரு ஒப்பற்ற ஆலயம் ஸ்ரீ கிருஷ்ணருக்காக பிரம்மாண்டமாக எழுப்புவதற்கு பெங்களூர் இஸ்கான் அமைப்பின் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
விண்ணை முட்டுகின்ற எத்தனையோ கட்டிடங்கள் இந்தியாவில் இருக்கின்ற போது, கிருஷ்ணருக்காக ஒரு உயரமான பிரம்மாண்டமான கட்டிடம் ஏன் எழுப்பக்கூடாது என்று ஸ்ரீல பிரபுபாதா உருகத்துடன் கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் அந்த அற்புத கனவு இப்போது எல்லோரும் மகிழ்ந்திடும் வண்ணம் நனவாக போகின்றது.
“பிருந்தாவன சந்தரோதய மந்திர்” என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கிருஷ்ணர் ஆலயம் 700 அடி உயரத்தில் இந்தியாவின் மிக உயரமான ஆலயமாக 5,40,000 சதுரடியில் கட்டப்பட இருக்கின்றது. இந்த ஆலயம் கிருஷ்ணரை வழிபடுவதற்கு மட்டுமேயல்லாமல் பகவத்கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தின் மிக உயர்ந்த புனிதமான கருத்துக்களை மனித இனத்திற்கு எப்போதும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு ஆன்மீக மையமாகவும் அமையும்.
அறிவு, மதம் மற்றும் பண்பாடு சார்ந்த மிக உயர்ந்த கருத்துக்கள் இந்த ஆன்மீக மையத்திலிருந்து வெளிப்பட உள்ளன. இதன் மூலமாக பகவான் கிருஷ்ணரின் போதனைகள்யாவும் மனிதகுலத்தை இன்னும் ஒரு படி மேன்மையாகவும் முழுமையாகவும் சென்றடையக் கூடிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
இந்த பிருந்தாவன சந்திதரோதய மந்திரில், கிருஷ்ண லீலா பார்க், கிருஷ்ணா ஹெரிட்டேஜ் மியுசியம், கிருஷ்ணாவாஸ் மற்றும் கிருஷ்ணா குடிர் ரெட்ரீட்ஸ், பக்தர்கள் கோள்களின் அமைப்பை பார்த்து அறிந்து கொள்வதற்கான மிகச்சிறந்த வானவியல் தொலைநோக்கு மையம் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும்.
மேலும் 70 தலங்களை கொண்டு பிரம்மாண்டமாக விளங்கப்போகும் இந்த உயரமான ஆலயத்தில் கிருஷ்ணர் சம்பந்தப் பட்ட திருவிழாக்கள் வருடம் முழுவதும் இசை மற்றும் கலை விழாக்களுடன் நடைபெறும். சமூக முன்னேற்ற திட்டங்களின்கீழ் ஆயிரக்கணக்கான வசதி வாய்ப்பற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். ஆலயத்தின் பரப்பளவு 62 ஏக்கருடனும் வாகன நிறுத்தங்கள் மற்றும் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளம் முதலியவையும் அமைந்திருக்கும்.
இந்த பெருமைமிகு ஆலயத்தை கட்டி முடிக்கும் பொறுப்பினை தியேட்டர் பிளான் என்னும் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய ஜனாதிபதி ஸ்ரீ பிரணாப் முகர்ஜி அவர்களால் நவம்பர் 2014-ம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்ட இவ்வாலயத்தின் கட்டுமான பணிகள் 2019-ம் ஆண்டு பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Tags: News, Lifestyle, Art and Culture