மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆங்கிலப் புத்தாண்டு விழா!
Posted on 02/01/2017
மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 2017 ஆங்கிலப் புத்தாண்டு விழா கலச, விளக்கு வேள்வி பூசை, கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு மேடை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. அருள்மிகு அடிகளார் திருமண மண்டபத்தில் காலை 11.30 மணி அளவில் நடைபெற்ற சிறப்பு மேடை நிகழ்ச்சியில் ரூபாய்.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆன்மீககுரு அருள்திரு பங்காரு அடிகளார் பயனாளிகளுக்கு வழங்கினார். விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆன்மீககுரு அடிகளாரிடம் ஆசி பெற்றனர்.
விழாவை முன்னிட்டு சித்தர்பீடம் மலர்களாலும், ஒளி விளக்குகளாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரண்டு நாட்கள் விழாவாகக் கொண்டாடப்பட்ட இவ்விழாவில் நேற்று விடிகாலை 3 மணி அளவில் கருவறையில் அம்மனுக்கு சிறப்பு அபிடேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன.
மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற கலச, விளக்கு வேள்வி பூசையை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கிவைத்துப் பங்கேற்றார்.
தொடர்ந்து சித்தர்பீட ஓம்சக்தி மேடை அருகே துவங்கிய காலை நிகழ்ச்சிகளுக்கு இயக்கத் துணைத்தலைவர் கோ.ப.செந்தில் குமார் முன்னிலை வகித்தார்.
இரவு 11 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறப்பு வழிபாடு துவங்கியது. சித்தர்பீடத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாண்டு வாழ்த்தொலி எழுப்ப, "ஓம் சக்தி! பரா சக்தி!" வாழ்த்தொலிகள் முழங்க கருவறையில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இனிப்புகள் வழங்கப்பட்டன.
காலை 9 மணி அளவில் சித்தர்பீடம் வருகை தந்த ஆன்மீககுரு அருள்திரு பங்காரு அடிகளாருக்கு பாதபூசையுடன் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அன்னதானத்தை இயக்கத் துணைத்தலைவர் ஸ்ரீதேவிரமேஷ் துவக்கிவைத்தார்.
காலை 11.30 மணி அளவில் அருள்திரு அடிகளார் திருமண மண்டபத்தில் சிறப்பு மேடை நிகழ்ச்சிகள் துவங்கின. கர்நாடக மாநில செவ்வாடை பக்தர்கள் பொறுப்பற்று நடத்திய இவ்விழாவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பத்து மாணவர்களுக்கு மடிக்கணினிகள், 5 பேருக்கு பயணிகள் ஆட்டோ ரிக் ஷாக்கள், 21 பேருக்கு தையல் இயந்திரங்கள், 10 பேருக்கு இரத்த அழுத்தம் சரிபார்க்கும் கருவிகளும் 9 பேருக்கு சர்க்கரை அளவைச் சீராக்கும் கருவிகள், 9 ஆஸ்துமா நோயாளிகளுக்கு சுவாசத்தை சீராக்கும் நவீன மருத்துவக் கருவிகள், 10 பேருக்கு தகடுகள் வெட்டும் கருவிகள், 9 பேருக்கு துளையிடும் இயந்திர கருவிகள், மூன்று சக்கர மிதிவண்டிகள், கால் இழந்த ஒருவருக்கு செயற்கைக் கால், விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் மேலும் ஏழைகளுக்கும் குழந்தைகளுக்கும் இதய அறுவை சிகிச்சைக்காக ஒரு இதய நோய் சிறப்பு மருத்துவமனைக்கு ரூ.12 லட்சம், ஒரு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம், சிறப்புக் குழந்தைகளுக்கான அன்னை இல்லத்திற்கு ரூ.3 லட்சம் காசோலைகள் அருள்திரு அடிகளால் வழங்கப்பட்டன.
மொத்தத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துரையைத் தொடர்ந்து லட்சுமி பங்காரு அடிகளார் ஆன்மீகப் பேருரை நிகழ்த்தினார். சக்தி, பாலு நன்றி உரை வழங்கினார் முன்னதாக சக்தி.ஜெய்கிரிஷ் அனைவரையும் வரவேற்றார்.
விழா ஏற்பாடுகளை கர்நாடக மாநில மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க பொறுப்பாளர்கள் சக்திகள் ராஜகோபால், உதயகுமார் தலைமையில் தொண்டர்கள் சிறப்பாகச் செய்திருந்தினர்.
Tags: News, Lifestyle, Art and Culture, Academy