தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடியால் திணறும் ரசிகர்கள்!
Posted on 07/07/2017
தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்து கடந்த நான்கு நாட்களாக தியேட்டர் உரிமையாளர்கள் நடத்தி வந்த ஸ்டிரைக் நேற்றுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது. இன்று முதல் தியேட்டர்கள் வழக்கம் போல செயல்பட ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், ஜிஎஸ்டி., உடன் கூடிய கட்டணத்துடன் டிக்கெட் முன் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன் 100க்கு கீழ் உள்ள டிக்கெட் விலைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியும்., 120க்கு மேல் உள்ள டிக்கெட் விலைக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யும் சேர்த்து வசூலிக்கப்படும் என்று அறிவித்தார்.ஆனால் இந்த அறிவிப்பு காற்றோடு போய்விட்டது.
தியேட்டர் உரிமையாளர்கள், ஏகத்திற்கும் டிக்கெட் விலை வைத்து விற்பனை செய்கின்றனர். குறிப்பாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டிற்கு ஒவ்வொரு வகுப்பிற்கு தகுந்தபடி ஆன்லைன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டிக்கெட் விலையுடன் சேர்த்து ஆன் லைன் கட்டணமாக ரூ.30 முதல் ரூ.43 வரை வசூலிக்கின்றனர். இதன்மூலம், சென்னையில் உள்ள பிரபலமான மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஜிஎஸ்டிக்கு முன்பு வரை இந்தக் கட்டணங்கள் 150 ரூபாயாக இருந்தன. ஜிஎஸ்டி, அமலுக்கு வந்துள்ள நிலையில் ரூ.153 மற்றும் ரூ.30 - 40 சேர்த்து ரூ.183 - 193 வரை வசூலிக்கப்படுகிறது.இதுதவிர தின்பண்டங்களின் விலையும் பல தியேட்டர்களில் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்படி கன்னா பின்னா என டிக்கெட் விலையை உயர்த்தி அடாவடி செய்யும் சில தியேட்டர்கள் மீது அரசு நடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Tags: News, Lifestyle