கதையின் நாயகனாகும் திண்டுக்கல் லியோனியின் வாரிசு
Posted on 12/02/2021
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான பட்டிமன்ற நடுவரும், நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் லியோனியின் வாரிசு லியோ சிவக்குமார் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
அறிமுக இயக்குனர் ஆர். விஜயகுமார் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'அழகிய கண்ணே'. இந்தப்படத்தில் பட்டிமன்ற நடுவரும், பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவகுமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, என் ஆர் ரகுநந்தன் இசையமைக்கிறார். இப்படத்தினை விஜய் நடிப்பில் உருவான 'மாஸ்டர்' படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, எஸ்தல் எண்டர்டெயினர் என்ற நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.
திண்டுக்கல் லியோனி பட்டிமன்ற நடுவராக தமிழ் மொழிக்கு சேவையாற்றி வருவதுடன் மட்டுமல்லாமல் கங்கா கௌரி என்ற படத்திலும் நடித்திருக்கிறார். அத்துடன் விரைவில் வெளியாகவிருக்கும் யோகி பாபுவின் ‘பன்னிக்குட்டி’ மற்றும் வைபவ்வின் ‘ஆலம்பனா’ என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.