100 நாள் கொண்டாடிய சூர்யாவின் 'சூரரைப் போற்று'
Posted on 20/02/2021
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் டிஜிற்றல் தளத்தில் வெளியான 'சூரரைப்போற்று' வெற்றிகரமாக நூறாவது நாளை கடந்து சாதனை படைத்து வருகிறது.
இந்திய விமான துறையில் பணியாற்றிய கப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட திரைப்படம் 'சூரரை போற்று'. நடிகர் சூர்யாவின் திரையுலக பயணத்தில் புதிய மைல்கல்லாக அமைந்த இந்த திரைப்படம், வழக்கமான முறையில் பட மாளிகைகளில் வெளியாகாமல், டிஜிற்றல் தளத்தில் வெளியாகி பாரிய ஆதரவையும், வரவேற்பையும் பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சூரரைப்போற்று, சூர்யாவின் வெற்றி பயணத்தை புதிய கோணத்தில் தொடங்கியது. இப்படத்திற்கு உலகளவில் கிடைத்த ஆதரவை விருதாக மாற்ற நினைத்த படக்குழுவினர் 12, 500 அமெரிக்க டொலர்களை கட்டணமாக செலுத்தி நேரடியாக ஓஸ்கர் விருது போட்டியில். பல பிரிவுகளில் பங்குபற்ற வைத்தனர். அத்துடன் நில்லாமல் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவிலும் பங்குபற்றியிருக்கிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதியன்று வெளியான இந்த திரைப்படம் 100 நாளை கடந்தது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். படம் வெளியாகி நூறு நாட்களுக்கு பிறகும் பொது வெளியிலும், திரை உலகிலும், ஊடக உலகிலும் இப்படத்தைப் பற்றிய விவாதங்கள், விமர்சனங்கள் தொடருகிறது இதனை சூர்யாவின் ரசிகர்கள் இணையத்தில் குறிப்பிட்டு கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 100 நாள் கொண்டாடிய சில படங்களில் சூர்யாவின் 'சூரரைப்போற்று' இடம்பெற்றதால், திரைஉலக ஆர்வலர்கள் நடிகர் சூர்யாவையும், இயக்குனர் சுதா கொங்கராவையும் மற்றும் பட குழுவினரையும் கைவலிக்க கரம் குலுக்கி பாராட்டு தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே நடிகர் சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாதப் படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இதனையடுத்து கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.