இயக்குனர் விருமாண்டியுடன் இணையும் சசிகுமார்
Posted on 18/01/2021
நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்குனர் விருமாண்டி இயக்குகிறார்.
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியாகி கவனத்தை ஈர்த்த திரைப்படம்' க/பெ ரணசிங்கம்'. டிஜிற்றல் தளத்தில் வெளியானாலும் வசூலிலும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற இப்படத்தை இயக்கியவர் விருமாண்டி. படத்தைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் தயாராக இருக்கும் புதிய பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சசிகுமார் ஒப்பந்தமாகியிருக்கிறார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி தயாராகவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தை திரைத்துறையில் அனுபவமிக்க விநியோகஸ்தரான பரதன் பிலிம்ஸ் ஆர் விஸ்வநாதன் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,' ரணசிங்கம் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி திரைக்கதை எழுதி இருக்கிறேன். கதையை கேட்டதும் நடிகர் சசிகுமார் நடிக்க ஒப்புக்கொண்டார். ஏப்ரலில் படப்பிடிப்பை தொடங்கி, இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது. தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது' என்றார்.
மதுரை மண்ணின் மணம் கமழும் பேச்சையும், பேச்சு மொழியையும் தன் வலிமையாக கொண்டிருக்கும் இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில், 'கிராமத்து நாயகன்' என்ற அடையாளத்துடன் வளைய வரும் நடிகர் சசிகுமார் இணைந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.