மனிதர்களுக்கும், வன விலங்குகளுக்குமிடையே உள்ள உறவை விவரிக்கும் 'காடன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு!
Posted on 03/03/2021
'பாகுபலி' பட புகழ் நடிகர் ரகுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் 'காடன்' படத்தின் முன்னோட்டம் இன்று வெளியானது.
தமிழ் திரை உலகில் வன விலங்குகளை வைத்து திரைப்படம் எடுத்தவர்களில் தேவர் பிலிம்ஸ் மற்றும் இயக்குநர் ராம நாராயணன் ஆகியோர்களை தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் அவர்களும் இந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார். இவர் யானையை முன்னிறுத்தி 'கும்கி', 'கும்கி 2 ',ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது மீண்டும் யானையை மையமாக வைத்து 'காடன்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப்படத்தில் வனவிலங்கு ஆர்வலராகவும், யானைகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்படும் போராளியாகவும் நடிகர் ராணா டகுபதி நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் விஷ்ணு விஷால், ரோபோ ஷங்கர், அஸ்வின் ராஜா ஜோயா உசைன், ஷிரியா அல்பாவ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. பி. அசோக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் மூன்று நிமிட முன்னோட்டம் இன்று வெளியானது.
இது தொடர்பாக இயக்குனர் பேசுகையில்,' வடகிழக்கு இந்திய மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப் பிரதேசத்தில் யானையின் வழித்தடத்தை மறித்து கொர்ப்பரேட் கம்பனி ஒன்று திட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்காக பாதுகாப்பு சுவர் எழுப்பியது. இதன் காரணமாக யானைகள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டன. அச்சுவற்றை தன்னுடைய துதிக்கையால் உடைக்க முயன்று 40க்கும் மேற்பட்ட யானைகள் இறந்தன. அங்குள்ள யானைகளில் காவலர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அந்த சுவரை அகற்றினார். யானைகளின் வழித்தடத்தை மறித்து மனிதர்கள் இடையூறு செய்தால் அதன் காரணமாக பாதிக்கப்படுவது மக்கள்தான் என்றும் கொரோனா போன்ற கொடிய தொற்று நோய்கள் இதன் காரணமாக மக்களை தாக்கக்கூடும் என்பதையும் இப்படத்தில் நாங்கள் இடம்பெற வைத்திருக்கிறோம். படம் தயாராகி மூன்று ஆண்டுகளாகிறது. கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் வெளியாக வேண்டிய இந்த திரைப்படம், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இம்மாதம் வெளியாகிறது. இயற்கையோடு இருக்கும் வனவிலங்குகளை நாம் இடையூறு செய்தால் அதனால் நமக்குத்தான் பக்கவிளைவுகள் அதிகம் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த காடன் தயாராகி இருக்கிறது. இப்படத்தின் உண்மையான நாயகன் ஒளிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி. நீங்கள் படத்தை படமாளிகையில் காணும் பொழுது உங்களை வனத்திற்குள் அழைத்துச் செல்வது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவதற்காக அவரும் அவரது குழுவினரும் தற்போது வரை ஓய்வில்லாமல் பணியாற்றி வருகிறார்கள். ' என்றார்.
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி தமிழ் ஹிந்தி தெலுங்கு என மூன்று மொழிகளிலும் ஒரே தருணத்தில் தயாராகி, இம்மாத இறுதியில் வெளியாகவிருப்பதால் 'காடன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் உருவாகியிருக்கிறது.