‘குமார சம்பவம்’
Posted on 08/04/2021
அறிமுக இயக்குநர் சாய் சிறிராம் இயக்கத்தில் பரதநாட்டிய கலையை முதன்மைப்படுத்தி ‘குமார சம்பவம்’ என்ற பெயரில் திரைப்படமொன்று தயாராகியிருக்கிறது.
அறிமுக நடிகர் சாய் சிறிராம், நடிகை நிகிதா மேனன், சாய் அக்சிதா, மீனாட்சி உள்ளிட்ட புதுமுகங்களின் பங்களிப்பில் ‘குமார சம்பவம்’ என்ற திரைப்படம் தயாராகியிருக்கிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை ,வசனம் எழுதியிருப்பதுடன் பாடல்களையும் எழுதி இசையமைத்து இயக்கியிருக்கிறார் புதுமுக இயக்குநர் சிறிராம்.
படத்தைப் பற்றி அவர் பேசுகையில்,‘ நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பரதநாட்டியக் கலைஞராக இருக்கிறேன். எம்முடைய தந்தையார் பி.கே.முத்து அவர்களும் பரதநாட்டியக் கலைஞராக இருந்தவர். ‘ஏழைபடும்பாடு’, ‘சுதர்ஸன்’, ‘மக்களைப் பெற்ற மகராசி’,‘மாங்கல்யம்’ போன்ற படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். தற்போது நானும் திரைத்துறையில் அறிமுகமாகியிருக்கிறேன். திரையில் பரதம் கற்றுக்கொண்டால் பெண்மை தன்மை வந்து விடும் என்ற தவறான ஒரு விடயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ‘தல ’ அஜித் நடித்த 'வரலாறு' படத்தில் பரதம் கற்றுக்கொண்டதால் தனக்கு திருமணமாகவில்லை என்பதாகவும், 'விஸ்வரூபம்' படத்திலும் கமல்ஹாசன் நாட்டியக்கலைஞராக இருப்பதால் மனைவி அவரை வெறுப்பதாகவும் காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆனால் பரதக் கலை என்பது புனிதமான விடயம். அதை அஜித், கமல்ஹாசன் போன்றவர்களால் தவறாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதனை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக ‘குமார சம்பவம்’ படத்தை தொடங்கி, நிறைவு செய்திருக்கிறேன். இப்படத்தில் பரதத்தை எளிய மக்களுக்கான கலையாகவும், அவர்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பதற்காக பஞ்சபூதங்கள் பற்றியும், ஐந்திணைகள், நவக்கிரகங்கள் பற்றியும் நாட்டியம் மூலமாக சொல்லியிருக்கிறேன். அத்துடன் கிராமத்துக் காவல் தெய்வங்களான ஏழு முனிகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன். பரதக்கலை என்பது மேம்பட்ட கலை என்பதை உணர்த்துவதற்காக இப்படைப்பை உருவாக்கியிருக்கிறேன்.’ என்றார்.
விரைவில் ‘குமார சம்பவம் ’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.