இரட்டை வேடத்தில் நடிக்கும் கார்த்தி
Posted on 09/03/2021
நடிகர் கார்த்தி, இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
'இரும்புத்திரை', 'ஹீரோ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் கார்த்தி கதையின் நாயகனாக நடிப்பதுடன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான 'சிறுத்தை' படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.
இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் , கார்த்தி நடிப்பில் தயாராகியிருக்கும் 'சுல்தான்' ஏப்ரல் 2ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதால் 'சுல்தான்' படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகளை அவர் ஏப்ரல் மாதம் நிறைவு செய்தவுடன் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்தப் படத்தை கார்த்தி நடிப்பில் வெளியாகி தோல்வியுற்ற 'தேவ்' படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜோர்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
எக்சன் திரில்லராக உருவாகவிருக்கும் பெயரிடப்படாத இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.