பிக்பாஸ் சுஜா தம்பதிக்கு கமல் பிரியாணி விருந்து; கமல் அப்பாவுக்கு நன்றி என சுஜா நெகிழ்ச்சி
Posted on 08/12/2018
பிக்பாஸ் சீசன் 1ல் இருந்த சுஜாவை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடமுடியுமா என்ன? மேலும் கிடாரி முதலான பல படங்களில் நடித்திருக்கிறார் சுஜா.
சுஜாவும் நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் பேரனான சிவகுமாரும் காதலித்து வந்தனர். சுஜாவின் பிறந்தநாளின் போது, அவரின் காதலர் சிவகுமார், கல்யாணத் தேதியை முறைப்படி வெளியுலகிற்குத் தெரிவித்தார். ‘சுஜா, இந்தப் பிறந்தநாளில் இதுவே உனக்கான பரிசு’ என்று தெரிவித்திருந்தார். இதில் நெக்குருகிப் போனார் சுஜா.
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் சுஜா, சிவகுமார் திருமணம் இனிதே நடைபெற்றது. திருமணத்துக்கு முக்கியப் பிரமுகர்கள் பலரும் வந்து கலந்துகொண்டு ஆசி வழங்கினர்.
இதையடுத்து நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், சுஜாவையும் சிவகுமாரையும் தம்பதி சமேதராக அழைத்து, அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து வாழ்த்தினார்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, ‘என் அப்பாவை அழைத்து அவருக்கு சாப்பாடு போடணும். அதான் என் ஆசை. அது நிறைவேறுமா தெரியலை’ என்று சொல்லிவிட்டு சுஜா அழுதது நினைவிருக்கலாம். அப்போது கமல், ‘பாருங்க… வரலேன்னா, அப்பா ஸ்தானத்துல நான் வரேன், சாப்பிடுறதுக்கு’ என்று சொல்ல, அழுதுவிட்டார் சுஜா.
இப்போது சுஜா தம்பதியை அழைத்து கமல் விருந்து வழங்கியதில் இன்னும் நெக்குருகிப் போனார் சுஜா.
மேலும், கமல் அப்பாவுக்கு நன்றி. ஸ்ரீப்ரியா அத்தைக்கும் நன்றிகள். விரைவில் கமல் அப்பா எங்கள் வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதைவிட மகிழ்ச்சியான தருணம் வேறில்லை என்று நெகிழ்ந்து சொல்கிறார் சுஜா.
Tags: News, Hero, Madurai News