இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்
Posted on 21/11/2018
இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க வைகைப்புயல் வடிவேலு மறுத்துவந்த நிலையில் தற்போது சமரசம் ஏற்பட்டு படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடித்து 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க முடிவுசெய்யப்பட்டு அதற்கான பணிகளும் இடம்பெற்றுவந்தன.
இதற்கிடையே சில கருத்துவேறுபாடுகள் காரணமாக வடிவேலு இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.
இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்த இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர், நடிகர் சங்கத்திடம் தெரிவித்திருந்தனர்.
எனினும் தீர்வு எட்டப்படாத நிலையில் வடிவேலுக்கு சினிமாவில் தடை விதிக்கப்படவிருப்பதாக செய்திகள் பரவின.
இந்நிலையில் தற்போது இம்சை அரசன் படக்குழுவிற்கும் வடிவேலுவிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது மதுரையில் வசிக்கும் வடிவேலு படப்பிடிப்பிற்காக சென்னை வர சம்மதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பல பிரச்சினைகளின் பின்பு ஒப்பந்தமாகியுள்ள இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு உரிய நேரத்தில் தொடங்கும் பட்சத்தில் படம் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Tags: News, Hero