ஐஸ்வர்யா ராஜேஷின் 'திட்டம் இரண்டு' படப்பிடிப்பு நிறைவு
Posted on 31/01/2021
'கோலிவுட்டின் மர்லின் மன்றோ' என வர்ணிக்கப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தயாராகிவரும் 'திட்டம் இரண்டு ' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.
'ஏண்டா தலையில எண்ண வெக்கல' என்ற படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'திட்டம் இரண்டு'. இப்படத்தில் கதையின் நாயகியாக 'டஸ்கி பியூட்டி'யான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு, அரசின் அனுமதியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று, நிறைவடைந்திருக்கிறது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிற்றல் தளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'க / பெ ரணசிங்கம்' படத்தில் நடித்ததற்காக இந்த ஆண்டிற்கான 'சிறந்த நடிகை' விருது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருப்பதால், அவரின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'திட்டம் இரண்டு' படத்திற்கும் வரவேற்பு அதிகரித்திருக்கிறது.