கபடி வீரராக களமிறங்கும் துருவ் விக்ரம்
Posted on 29/01/2021
அறிமுகமான ‘ஆதித்ய வர்மா’ படத்தில் சத்திர சிகிச்சை செய்யும் மருத்துவ மாணவராக நடித்து அசத்திய நடிகர் துருவ் விக்ரம், தற்போது கபடி விளையாட்டு வீரராக நடிக்கவிருக்கிறார்.
‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் அனைத்து தரப்பினரின் மனதிலும் சாதி வேறுபாடு குறித்த நேர்மறையான அதிர்வை ஏற்படுத்திய படைப்பாளி மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் ‘கர்ணன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில்,' தமிழகத்திலுள்ள சிறிய கிராமத்தில் பிறந்து, கபடி விளையாட்டில் ஆர்வம் கொண்டு, பயிற்சி பெற்று, கடுமையான உழைப்பால் தேசிய அளவிலான வீரராக உயர்ந்து, இந்திய அணியில் பங்குபற்றி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி சார்பாக பங்குபற்றியதுடன், இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்வதற்கு காரணமாக இருந்த வீரரைப் பற்றிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது விளையாட்டு துறை சம்பந்தப்பட்ட திரைப்படங்களுக்கு ரசிகர்கள் பாரிய அளவில் ஆதரவளித்து வருவகிறார்கள். இதில் கபடி வீரராக துருவ் விக்ரம் நடிக்கிறார். ஏனைய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.’ என்றார்.
இந்த திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் 'பரியேறும் பெருமாள்', :இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', 'ரைட்டர்', 'குதிரைவால்' ஆகிய படங்களைத் தயாரித்த இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கிறார்.
‘ஆதித்ய வர்மா’ பெறத் தவறிய கொமர்ஷல் வெற்றியை இப்படம் பெறும் என்பதற்கு துருவ் விக்ரம்=பா ரஞ்சித்= மாரி செல்வராஜ் என்ற மாயஜாலம் நிகழ்த்தும் மூவர் கூட்டணியே சாட்சி என திரையுலக வணிகர்கள் தற்போதே உறுதியுடன் கூறுகிறார்கள்.