அண்ணாத்த படக்குழுவினருக்கு கொரோனா!
Posted on 24/12/2020
ரஜினி நடித்து வந்த, அண்ணாத்த படக் குழுவில், நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், ஐதராபாதில் நடந்து வந்த படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. ரஜினிக்கு நடந்த பரிசோதனையில், அவருக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளதால், கட்சி அறிவிப்பில் தாமதம் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி, நயன்தாரா, மீனா, குஷ்பு நடிக்க, சிவா இயக்கும், அண்ணாத்த படப்பிடிப்பு, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் உள்ள, ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில், 14ம் தேதி துவங்கியது. கொரோனா பாதுகாப்பு வளையத்துடன், சில நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில், படக் குழுவில், நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. ரஜினி உள்ளிட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ரஜினி உள்ளிட்ட படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர் - நடிகையருக்கு, தொற்று ஏற்படவில்லை என, தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.