ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ‘ஏமாலி' நடிகை!
Posted on 06/11/2017
'காதல் கண் கட்டுதே', 'ஏமாலி' ஆகிய படங்களின் ஹீரோயின் அதுல்யா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அறிமுகப் படத்திலேயே பல ரசிகர்களை ஈர்த்தவர் இவர். அதுல்யா, சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி, பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கும் 'ஏமாலி' திரைப்படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப்படத்தை வி.இசட்.துரை இயக்குகிறார். 'லதா புரொடக்ஷன்ஸ்' என்ற புதிய பட நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்.
'ஏமாலி' படத்தின் முதல் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் டீசரை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். படத்தின் ஒளிப்பதிவை எம்.ரத்திஷ் கண்ணா, பிரகாஷ் இருவர் கவனிக்கின்றனர். சாம்டி.ராஜ் 'ஏமாலி' படத்திற்கு இசை அமைக்கிறார்.
‘ஏமாலி' என்ற தலைப்பு முன்பே சர்ச்சைக்குள்ளானது. ஏமாலி என்பது தவறான வார்த்தை. ‘ஏமாளி' என்பதே சரியான வார்த்தை என ஒருவர் இந்தத் தவறைச் சுட்டிக்காட்டி ட்வீட் செய்திருந்தார். அதற்கு, தெரிந்தேதான் ‘ஏமாலி' என்று பெயர் வைத்துள்ளேன். படத்தில் இதற்கான காரணம் இருக்கிறது என்று பதில் கூறினார் இயக்குனர் வி.இசட்.துரை.
வெளியான டீசரில் நடிகை அதுல்யா ரவி, ஆபாசமான காட்சிகளில் நடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்தனர். ஆடையைக் கழற்றுவது போலவும், படுத்திருக்கும் நிலையிலுமான காட்சிகளும் டீசரில் இடம்பெற்றிருந்தன. இதற்கு ரசிகர்கள் பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அதுல்யா சிகரெட் பிடிக்கும் காட்சியும் படத்தின் டீசரில் இடம்பெற்றிருந்தது. முதல் படத்தில் ஹோம்லியாக நடித்துவிட்டு இப்போது இப்படியான நடிப்பில் இறங்குவது தவறு என்கிற ரீதியில் பலரும் தங்களது விமர்சனங்களை வைத்திருந்தனர். அதுல்யாவுக்கு ஆதரவாகவும் பலர் பேசி வந்தனர்.
உங்களது நேர்மறையான ஊக்கத்திற்கு நன்றி. படத்தின் டீசரை வைத்தே படத்தையும், கதாபாத்திரத்தையும் முடிவு செய்யாதீர்கள். படத்தில் பாஸிட்டிவான கேரக்டரில்தான் நான் நடித்திருக்கிறேன். படத்தில் அந்தக் கதாபாத்திரத்திற்கு நான் நியாயமாகத் தான் நடித்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார் அதுல்யா.
Tags: News, Hero, Star