ஐஸ்வர்யா ராஜேஷின் அக்கா ஜோதிகாவா?
Posted on 12/09/2017
சூர்யாவை திருமணம் செய்து கொண்டதால் நடிப்புக்கு குட்பை சொன்ன ஜோதிகா 7 வருட இடைவெளிக்கு பிறகு '36 வயதினிலே' படத்தில் நடித்தார். பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறத்தவறியதால் அடுத்தப் படத்தில் நடிக்க தயக்கம்காட்டினார் ஜோதிகா.
தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்தும் உள்ள கதைகளில் மட்டுமே நடிப்பது என்ற முடிவிலிருந்து மாறி சராசரியான கதையை தேர்வு செய்ய எண்ணியபோது 'குற்றம் கடிதல்' பட இயக்குநர் பிரம்மா சொன்ன கதை பிடித்துப்போனதால் அதில் நடிக்க சம்மதித்தார். ஜோதிகா, நடிப்பில் உருவாகியுள்ள 'மகளிர் மட்டும்' இம்மாதம் 15-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்த படம் தவிர பாலா இயக்கத்தில் 'நாச்சியார்' என்ற படத்திலும் நடித்து வருகிறார் ஜோதிகா. இந்நிலையில் மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் ஜோதிகா. மணிரத்னம் தயாரித்த 'டும் டும் டும்' படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஜோதிகா இதுவரையிலும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்ததில்லை. மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி நடித்துவிட்டநிலையில் இப்போது ஜோதிகாவின் ஆசையும் நிறைவேறியுள்ளது.
'காற்று வெளியிடை' படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமி, ஃபஹத் ஃபாசில், விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் முதலானோரும் நடிக்கவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் அக்காவாக ஜோதிகா நடிக்க இருப்பதாகவும் தகவல் அடிபடுகிறது.
Tags: News, Hero, Star