மீண்டும் போலீஸாக நடிக்கும் அதர்வா
Posted on 05/02/2021
நடிகர் அதர்வா பெயரிடப்படாத படமொன்றில் மீண்டும் போலீஸ் நடிக்கிறார்.
‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’,‘ 100’, ‘கூர்க்கா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சாம் அண்டன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடிகர் அதர்வா நடிக்கிறார். ‘100’ படத்தில் நடிகர் அதர்வா போலீஸ் நடித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் சாம் அண்டன் பேசுகையில்,' தந்தை =மகன் உறவை ஆழமாக சித்தரிக்கும் கதை இது. பிரெஞ்சு மொழியில் வெளியாகி பிரபலமான ‘ஜோன் விக் சீரிஸ்’ படங்களைப் போல் இந்த படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும். நாயகனின் தந்தை போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் போது, ஒரு குற்ற வழக்கை முழுமையாக விசாரிக்காமல் கிடப்பில் போடுகிறார். நாயகனான அதர்வா அந்த வழக்கை வேறு கோணத்தில் விசாரித்து, குற்றவாளிகளை எப்படி கண்டறிகிறார்? என்பதும், அதற்கு பின் என்ன நடக்கிறது? என்பதும் தான் இப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை. அதர்வா காக்கி அணியாமல், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் காவலராக நடிக்கிறார். இதில் தந்தையாக நடிப்பதற்கு மூத்த நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மார்ச் மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.' என்றார்.
இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தில் நடிக்கும் நடிகை, நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தள்ளி போகாதே’ , ‘குருதி ஆட்டம்’ ஆகிய இரண்டு படங்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.