நடிகர் பாண்டு காலமானார்
Posted on 05/05/2021
தமிழ் திரை உலகில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம்வந்த நடிகர் பாண்டு இன்று காலை காலமானார்.
1970ஆம் ஆண்டு 'மாணவன்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பாண்டு. 100 படங்களுக்கு மேல் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார். இவர் இறுதியாக 2020 ஆம் ஆண்டில் வெளியான 'இந்த நிலை மாறும்' என்ற படத்தில் நடித்திருந்தார். நடிகராக மட்டுமில்லாமல் ஓவிய கலைஞராகவும் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ் என்பவரும் நடிகர் என்பது நினைவுகூறத்தக்கது.
74 வயதாகும் நடிகர் பாண்டுவிற்கு அண்மையில் கொரனோ தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை நடிகர் பாண்டுவின் உயிர் பிரிந்தது.
இவருடன் கொரோனாத் தொற்று பாதிப்புக்குள்ளான இவரது மனைவி குமுதாவிற்கு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு என மூன்று வாரிசுகள் உள்ளனர். இதில் பின்டு நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். கொரோனாத் தொற்று பாதிப்பு காரணமாக தமிழ் திரையுலகில் பலியானவர்களின் பட்டியலில் நடிகர் பாண்டுவும் இணைந்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.