கை விரல்களில் ஏற்படும் கார்பல் டனல் சிண்ட்ரோம் என்ற பாதிப்பிற்குரிய சிகிச்சை

கை விரல்களில் ஏற்படும் கார்பல் டனல் சிண்ட்ரோம் என்ற பாதிப்பிற்குரிய சிகிச்சை

இன்றைய தேதியில் எம்மில் பலரும் கொரோனா பரவல் காரணமாக வீட்டிலிருந்தே பணியாற்றுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் மடிக்கணனி மற்றும் கொம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படுகிறது. அலுவலக சூழல் அல்லாத வீட்டுச்சூழல் என்பதால் முறையாக அமர்ந்து பணியாற்றாமல், எம்முடைய சௌகரியத்துக்கு ஏற்றவகையில் அமர்ந்து பணியாற்றுகிறோம். இதன் காரணமாக தசை பிடிப்பு, முதுகு வலி, கண் பிரச்சனை ஆகியவை தற்போது அதிகரித்திருப்பதாக மருத்துவத் துறையினர் குறிப்பிடுகிறார்கள். அதே தருணத்தில் கார்பல் டனல் சிண்ட்ரோம் எனப்படும் கைவிரல்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு, வலி போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்காக எலும்பியல் மருத்துவ நிபுணர் பாலசுப்ரமணியன், M.S., Consultant of orthopaedic surgeon அவர்களை சந்தித்தோம்.

கார்பல் டனல் சிண்ட்ரோம் என்றால் என்ன?
 
கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு எம்மில் 15 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மடிக்கணனி, ஸ்மார்ட் போன், கொம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் தவறான முறையில் அமர்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் கார்பல் டனல் சிண்ட்ரோம் என்பதும் ஒன்று. எம்முடைய கை விரல்களில் சுண்டுவிரல் நீங்கலாக மீதமுள்ள விரல்களில் ஏற்படும் நரம்பியல் பாதிப்பை கார்பல் டனல் சிண்ட்ரோம் என்றும் கூறுவர். இதனை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் பாரிய சிக்கலுக்கு வழிவகுக்கும். இத்தகைய சிக்கல் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது என்றும், ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் இதன் காரணமாக பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
 
பாதிப்பின் அறிகுறிகள் குறித்து..?
 
உணர்வை அறிவதற்கும், ஒரு பொருளை உறுதியாக கைகளால் பற்றி கொள்வதற்கும் கை விரல்கள், தசைகள், தசை நார்கள், நரம்புகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடு என்பது முக்கியமானது. இதனை மருத்துவ மொழியில் சென்சரி மூவ்மெண்ட், மோட்டார் மூவ்மெண்ட் என குறிப்பிடுவார்கள். இந்நிலையில் கை விரல்களின் மேற்பகுதியில் உள்ள அதாவது மணிக்கட்டு பகுதியில் கார்பல் டனல் என்ற ஒரு நரம்பியல் தொகுப்பு மண்டலம் உள்ளது. இது மீடியன் நரம்புத்தொகுதி என்றும், அல்நார் நரம்புத்தொகுதி என்றும் இரண்டு பிரிவாக அமைந்திருக்கிறது. இவை தான் கை விரல்களின் அசைவையும், நரம்பியல் செயல்திறனையும் ஒழுங்குபடுத்துகிறது. இதில் மீடியன் நரம்புத் தொகுதியில்  இயல்பான அளவைவிட கூடுதலான அளவில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கைவிரல்களின் நரம்பியல் செயல்பாட்டில் சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டு, சுண்டுவிரல் நீங்கலாக மீதமுள்ள நான்கு விரல்களில் வலி, கூச்ச உணர்வு, மரத்துப்போதல்... போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சிலருக்கு அப்பகுதியில் தசைகள் பலவீனமடையக்கூடும்.
 
கைவிரல் உணர்வின்மை பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
 
மணிக்கட்டு பகுதியில் உள்ள பிரத்யேக சவ்வுகள் வீக்கமடைவது, அங்குள்ள தசை நார்களில் விரிசல் அல்லது கிழிசல் ஏற்படுவது, உடற்பருமன் காரணமாக அப்பகுதியில் கொழுப்பு கட்டிகள் உண்டாவது, இயல்பான அளவைவிட கூடுதலாக அங்கு அழுத்தம் ஏற்படுவது போன்ற காரணங்களால் கைவிரல்களில் மரத்து போதல் என்ற பாதிப்பு ஏற்படும். சிலருக்கு அப்பகுதியில் வலி, உணர்வின்மை போன்றவையும் ஏற்படக்கூடும். ஊசியால் குத்துவது போன்ற உணர்வும் சிலருக்கு ஏற்படும். எழுத்தாளர்கள், பூக்கட்டும் பெண்மணிகள், பந்துவீச்சாளர்கள் என மணிக்கட்டு இயக்கத்தை அதிக அளவில் பயன்படுத்தும் பணியை செய்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், தைராய்டு பாதிப்புள்ளவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம்.  கணனி இயக்கத்திற்கு உதவும் மவுஸ் எனப்படும் கருவியை அதிகமாக பயன்படுத்தினாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். பெண்கள் கருவுற்றிருக்கும் காலகட்டத்திலும் அவர்களுக்கு நீர்சத்து பற்றாக்குறையின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு உண்டு. ருமட்டாய்டு ஒர்த்தரைட்டிஸ் என்ற பாதிப்பு உள்ளவர்களுக்கும் இத்தகைய நோயின் அறிகுறி ஏற்படலாம். மணிக்கட்டு பகுதியில் உள்ள எட்டிற்கும் மேற்பட்ட சிறிய அளவிலான குருத்தெலும்புகளில் ஏதேனும் விபத்தின் காரணமாக காயம் ஏற்பட்டாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இப்பகுதியில் உள்ள தசை நார்களில் ஏதேனும் நீர் கட்டிகள் உண்டானாலும் கூட இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்பை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், நாளடைவில் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு, தசைகள் பலவீனமடைந்து பாரிய பாதிப்பு உண்டாகும்.

எம்மாதிரியான பரிசோதனைகள் மூலம் இத்தகைய பாதிப்பை உறுதிப்படுத்துவர் ?
 
நோயாளியின் மருத்துவ வரலாறு, பாதிப்பின் வரலாறு, எக்ஸ் ரே, Phalen's Test மற்றும் Tinel's Test எனப்படும் பயிற்சி சோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை, எலக்ட்ரோமயோகிராபி, nerve conduction study எனப்படும் நரம்பியல் பரிசோதனை, தசைகளின் இயங்கு திறனை கண்டறியும் மோட்டார் டெஸ்ட் மற்றும் ரத்த பரிசோதனை போன்ற பரிசோதனைகளை செய்து பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்துவர்.
 
கைவிரல் பாதிப்பைக் குறைக்கும் சிகிச்சை என்ன?
 
நீரிழிவு, தைராய்டு, உடற்பருமன் போன்ற காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை சத்திர சிகிச்சையற்ற முறையில் சிகிச்சை அளித்து, பாதிப்பை குணப்படுத்தலாம். கைவிரல்களில் மரத்துப்போவது குறைக்க முதலில் நிவாரணமாக பிரத்யேக பட்டை ஒன்றை அணிந்துகொள்ளலாம். இதன் மூலம் அங்கு கூடுதல் அழுத்தம் ஏற்பவடுவது குறைக்கப்பட்டு, பாதிப்பை கட்டுப்படுத்தலாம். வலி அதிகமாக இருக்கும் இடங்களில் ஐஸ் ஒத்தடம் அளிக்கலாம். இதன் மூலம் அப்பகுதியில் தசைநார் பாதிப்பு அதிகமாவதை கட்டுப்படுத்தலாம். மேலும் பாதிப்பின் தன்மையை குறைக்க மருத்துவர்கள் களிம்பு மற்றும் மாத்திரைகளை வழங்குவர். அதே தருணத்தில் மருத்துவர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டலுக்கு ஏற்ப நரம்புகளை வலிமைப்படுத்துவதற்கான உணவு வகைகளை சாப்பிடலாம். வலியும், பாதிப்பும் அதிகமாக இருந்தால் அதாவது Nerve Edema என்ற நிலை ஏற்பட்டால், இதற்கு நிவாரணமாக வீரியம் குறைந்த ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்தலாம். வெகு சிலருக்கு ஊசி மூலம் நேரடியாக மணிக்கட்டு பகுதியில் ஸ்டீராய்டு மருந்தை செலுத்த வேண்டியதிருக்கும். Activity modification என்ற பயிற்சியை பின்பற்றி இதன் பாதிப்பை குறைக்கலாம். இத்தகைய சிகிச்சைகள் மேற்கொண்டு ஆறு வார காலத்திற்கு பிறகும் இத்தகைய பாதிப்பு முழுமையாக நீங்கவில்லை என்றால்.. மணிக்கட்டு பகுதியில் தசை பலவீனம் ஏற்பட்டிருந்தால், அத்தகைய தருணத்தில் மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் பரிசோதனைக்குப் பின்னர் மணிக்கட்டுப் பகுதியில் சிறிய அளவிலான சத்திரசிகிச்சையை மேற் கொள்வர். இத்தகைய நுண் துளை சத்திரசிகிச்சையின் போது கார்பல் டனல் என்ற பகுதியில் உள்ள அழுத்தத்தை அகற்றுவர். இதன் மூலம் வலியும், பாதிப்பும் முழுமையாக குறையும். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 9843859353என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top