முழங்கால் மூட்டுகளின் முன்புற தசைநார் பாதிப்பிற்குரிய சத்திர சிகிச்சை

முழங்கால் மூட்டுகளின் முன்புற தசைநார் பாதிப்பிற்குரிய சத்திர சிகிச்சை

இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்கள் நாளாந்த வாழ்வாதாரத்திற்காக வெகு தொலைவிற்கு துவி சக்கர வாகனங்களில் பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இவர்களுக்கு எதிர்பாராமல் விபத்து ஏற்படும்பொழுது முழங்காலில் அடிபட்டு வீக்கம் உண்டாகிறது. இதற்காக மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னர், பிசியோதெரபி எனப்படும் இயன்முறை மருத்துவ சிகிச்சையை மட்டும் பெற்றுக்கொண்டு குணமடைய விரும்புகிறார்கள். ஆனால் முழங்காலில் உள்ள தசைநார் பாதிப்பைத் துல்லியமாக அவதானித்த பிறகு அதற்கேற்ற சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்காக மூட்டு மாற்று சத்திர சிகிச்சை நிபுணரான டாக்டர். அருண் கண்ணன், M.S., அவர்களை சந்தித்தோம்.

ஏ சி எல் எனப்படும் முழங்கால் மூட்டு தசைநார் பாதிப்பு குறித்து..?
 
விளையாட்டு வீரர்களுக்கு அதிகளவில் ஏற்படும் பாதிப்புகளில் இதுவும் ஒன்று. பொதுமக்களில் பலருக்கு விபத்தின் காரணமாகவும், முழங்கால் மூட்டின் அச்சாணியாக விளங்கும் இந்த தசை நார்கள் சேதமடைந்து பாதிப்பு ஏற்படுவது உண்டு. எம்முடைய முழங்காலில் Anterior Cruciate Ligament மற்றும் The Posterior Cruciate Ligament என்ற இரண்டு ஜவ்வுகள் அமையப்பெற்றுள்ளன. இதில் பாதிப்பு ஏற்பட்டு சேதமடைந்தால் முழங்காலின் இயக்கத்தில் சமச்சீரற்ற தன்மை உண்டாகிறது. சிலருக்கு இதன் காரணமாக வீக்கமும், வலியும் உண்டாகக்கூடும். இதன் பாதிப்பை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு, அவதானித்து அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். இதனை புறக்கணித்தால் நாளடைவில் மூட்டு தேய்மானம் ஏற்பட்டு, மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய சூழல் உருவாகும்.
 
Collateral ligament, cruciate ligament, meniscus ஆகிய சவ்வுகள் முழங்கால் மூட்டின் இருபுறங்களிலும் அமைந்திருக்கும் இந்த ஆறு சவ்வுகளில் ஏ சி எல் எனப்படும் தசை நார்களில் தான் அதிகளவு பாதிப்பு ஏற்படுகிறது. இதனை அடுத்து வேறு சிலருக்கு மெனிஸ்கஸ் எனப்படும் சவ்வில் பாதிப்பு ஏற்படும். உதைப்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவது அதிகம். அதே தருணத்தில் எம்மில் பலருக்கும் மாடிப்படிகளில் ஏறும்போதும் அல்லது இறங்கும் போதும், விபத்தின் போதும் அல்லது சமதளத்தில் நடக்கும்போதும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். துவி சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது எதிர்பாராமல் நிகழும் விபத்தை தடுப்பதற்காக தற்காத்துக்கொள்ளும் தருணத்திலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.
 
இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருப்பதன் அறிகுறி என்ன?
 
பொதுவாக தசைநார் பாதிப்பு அல்லது சேதமடைந்திருந்தால் அவ்விடத்தில் வலி, வீக்கம் ஏற்படும். சிலருக்கு வீக்கமடைந்து வலி இல்லாமல் இருக்கலாம். சிலருக்கு வலி மட்டும் ஏற்பட்டு, வீக்கம் மிக சிறிய அளவில் காணப்படக்கூடும். பெரும்பாலான தருணங்களில் கால்களை சமநிலையான அழுத்தத்துடன் பராமரிக்க இயலாத நிலை உண்டாகும். இதன் காரணமாக அவர்கள் கீழே விழுந்து விடுவார்கள். பொதுவாக இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நடக்கும் போது அசௌகரியத்தை உணர்வர்.  இப்படி உணர்ந்தால் உடனடியாக மருத்துவ நிபுணரைச் சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறவேண்டும். 
 
என்னென்ன பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பினை உறுதிப்படுத்துவார்கள்?
 
கிளினிக்கல் டயாக்னைஸ் எனப்படும் பாதிக்கப்பட்டவர்களின் கால் மூட்டுகளை அசைத்துப் பார்த்து ( Lachman Test) பாதிப்பின் தன்மையை ஓரளவு மருத்துவ நிபுணர்கள் அவதானிப்பார்கள். அதனை தொடர்ந்து பாதிப்பின் துல்லியத்தை அவதானிப்பதற்காக எக்ஸ்ரே பரிசோதனை, எம்ஆர்ஐ பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள்.
 
ஏ.சி.எல். பாதிப்பிற்கு சத்திர சிகிச்சை தான் சிறந்த தீர்வா..?
 
ஏ. சி. எல் எனப்படும் முழங்கால் தசைநார் பாதிப்பு அடைந்திருந்தாலும் நடக்க இயலும். ஆனால் அதில் சிரமங்களுடன் கூடிய அசௌகரியம் இருக்கும். வேகமாக நடக்க இயலாது. ஓட இயலாது சமதளமற்ற தரையில் சமநிலையுடன் நடப்பதில் தடுமாற்றம் இருக்கும். சிலருக்கு முழங்கால் தசைநார் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியாது. வேறு சிலர் இத்தகைய வலியை தாங்கிக் கொண்டு இருப்பார்கள். வேறு சிலர் பாதிப்பை உணர்ந்தாலும் ஐஸ் ஒத்தடம் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொண்டு தற்காலிகமாக நிவாரணம் பெறுவர். இவர்கள் முறையான சிகிச்சை பெறாவிட்டால்.., நாளடைவில் மூட்டில் வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டு, மூட்டு தேய்மானம் உண்டாகும்.
 
எம்ஆர்ஐ பரிசோதனைகள் முடிவுகளின்படி தசை நார்களின் பாதிப்பு பகுதி அளவு ஏற்பட்டிருக்கிறதா? அல்லது முழுமையாக சேதமடைந்து இருக்கிறதா? என்பதனை துல்லியமாக கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சையை வழங்குவர். பகுதியளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்களுக்கு ஐஸ் ஒத்தடம், பிரத்யேக காலுறை, வலி நிவாரணி மாத்திரைகள், இயன்முறை மருத்துவம் எனப்படும் பிசியோதெரபி பயிற்சிகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை சிகிச்சையாக வழங்கினால் அவர்கள் விரைவில் அத்தகைய பாதிப்பிலிருந்து மீண்டு விடுவர். ஆனால் முழங்கால் தசைநார் முழுமையாக சேதம் அடைந்திருந்தால் அதற்கு சிறந்த தீர்வு என்பது நுண்துளை பாணியிலான சத்திரசிகிச்சை தான். மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில் நுட்பங்களுடன் இத்தகைய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதால், சத்திரசிகிச்சை 100 சதவீத வெற்றியை வழங்குகிறது. இதன்போது நோயாளியின் மூட்டுப்பகுதியின் வேறு இடத்தில் இருக்கும் தசைகளை சிறிய அளவில் வெட்டி எடுத்து, இங்கு பொருத்துவர். மேலும் டைட்டானியம் ஸ்குரு, பயோ ஸ்குரு கால்சியம் பயோ ஸ்குரு போன்ற மிக நுட்பமான மூட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படாத கருவிகள் பொருத்தப்படும். தசை நார்களின் வலிமை அதிகரித்து, பாதிப்பு குறைந்து, பலன் கிடைக்கிறது. இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு விரைவில் நாளாந்த இயல்பான வாழ்க்கை நடைமுறைக்கு திரும்ப இயலும். விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து, ஆறு மாதம் அல்லது ஓராண்டிற்குப் பிறகு அவர்களின் வாழ்வாதாரமாகத் திகழும் விளையாட்டு துறைக்கு முழுமையாக திரும்பலாம். பொதுமக்களில் பலருக்கு ஆறுமாத காலத்தில் அவர்கள் தங்களின் இயல்பான வாழ்க்கை நடைமுறையுடன் வாழ தொடங்கலாம். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 87544 98680 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top