கொரோனாவிற்கு பின்னரான நரம்பியல் சிக்கல்களுக்கான நிவாரண சிகிச்சை

கொரோனாவிற்கு பின்னரான நரம்பியல் சிக்கல்களுக்கான நிவாரண சிகிச்சை

எம்மில் பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதற்கு பின்னர் பல்வேறு பக்க விளைவுகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அதில் தலைவலி, இருமல், காய்ச்சல், சமச்சீரற்ற இதயத்துடிப்பு, நெஞ்சு படபடப்பு, நெஞ்சுவலி உள்ளிட்ட இதய பாதிப்புகள், தூக்கமின்மை, சோர்வு என ஏராளமான விளைவுகளை பட்டியலிடலாம். இந்நிலையில் எம்மில் பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதற்குப் பிறகு நரம்பியல் தொடர்பானபாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கான அறிகுறிகள், அதற்கான சிகிச்சை ஆகியவற்றைக் குறித்து அறிந்துகொள்வதற்காக சென்னையை சேர்ந்த நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணரான டொக்டர் கோடீஸ்வரன், MBBS.,MRCS., M.Ch (Neuro)  அவர்களைச் சந்தித்தோம்.

கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பின்னரான நரம்பியல் தொடர்பான பக்க விளைவுகள் என்ன..?
 
உடல் முழுவதும் வலி, அசதி, சோர்வு, பலவீனம், தலைவலி, சுவை உணர் திறன் மற்றும் வாசனை நுகர் திறன் குறைவு, Brain Fog எனப்படும் சிந்திக்கும் திறனில் ஏற்படும் தடுமாற்றம் அல்லது சீரற்ற தன்மை, உடலில் ஏதேனும் ஒரு பகுதியிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பகுதியிலோ மரத்துப்போனது போன்ற உணர்வு, அத்துடன் அங்கு ஏதேனும் ஊர்வது போன்ற உணர்வு, வேறு சிலருக்கு குறைந்த வலியிலான குத்துவது போன்ற உணர்வு, நெஞ்சு இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வு, மூளைக்காய்ச்சல், கை கால் விரல்கள் ஆகியவற்றை இயக்கும்போது விருப்பத்திற்கு எதிராக நடுக்கம் ஏற்படுவது, விரல்களில் சிறிய அளவில் தன்னிச்சையாக நடுக்கம் ஏற்படுவது, வேறு சிலருக்கு உட்கார்ந்திருக்கும் போதோ அல்லது நடக்கும் போதோ மயக்கம் வருவது போன்ற உணர்வு, இவற்றையெல்லாம் கடந்து பதற்றம், படபடப்பு, பயம், கவலை, விரக்தி உள்ளிட்ட மனம் சார்ந்த பாதிப்புகளும் ஏற்படலாம். 
 
வேறு சிலருக்கு கொரோனாத் தொற்றுக்கு முன் அவர்கள் செய்துகொண்டிருந்த பணியின் திறன் சற்று குறையக் கூடும். சிலருக்கு வாய்ப்பகுதியில் வறட்சி ஏற்படும். நா வறண்டு போகும். கண் வறட்சியும் ஏற்படும். இயல்பான அளவை விட கூடுதலான அளவில் வியர்வை வெளிப்படுதல் போன்ற பாதிப்புகளும் கொரோனாத் தொற்று பாதிப்புக்கு பின்னர் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். வேறு சிலர் தங்களுடைய உடலின் வெப்பநிலை இயல்பாக இருந்தாலும் குளிரெடுக்கும் உணர்வு இருப்பதாகவும், வேறு சிலருக்கு உடலின் ஒரு பகுதியில் இயல்பான வெப்பநிலையும், மற்றொரு பகுதியில் அதற்கு மாறுபாடான வெப்பநிலையும் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இவையனைத்தும் நரம்பியல் தொடர்பான பாதிப்புகள் தான். 
 
மேலும் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் 20 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களுக்குத்தான் மூளைக்காய்ச்சல், பக்கவாதம், முகவாதம், வலிப்பு உள்ளிட்ட நரம்பியல் தொடர்பான குறைபாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு உண்டு. இதனை சரியான தருணத்தில் கண்டறிந்து சிகிச்சைப் பெற்றால் இவர்கள் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.  இவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே இத்தகைய பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய பாதிப்புகள் தற்காலிகமானதா? அல்லது நாட்பட்ட பாதிப்பாக மாறக்கூடுமா?
 
இத்தகைய அறிகுறிகள் அனைத்தும் எந்தவித கால அவகாசத்திற்குற்படாதவை. சிலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு, மூன்று மாதங்களுக்குப் பிறகு இவை ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்குள் இவை ஏற்பட்டு, மறைந்திருக்கலாம். இத்தகைய பாதிப்புகள் அனைத்தும் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் மட்டுமே உண்டாவதில்லை. சிலருக்கு விபத்து, நாட்பட்ட நோய் பாதிப்பு, நெருக்கமானவர்களின் மரணம் போன்ற காரணங்களாலும் மேற்கூறிய நரம்பியல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படக்கூடும். ஆனால் கொரோனாத் தொற்று காரணமாக இத்தகைய பாதிப்புகள் தற்போது 30 முதல் 80 சதவீதத்தினருக்கு ஏற்பட்டிருப்பதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இவற்றில் பெரும்பான்மையான பாதிப்புகள் நாளடைவில் தானாக சரியாக கூடியவை என உறுதியாக குறிப்பிடலாம். மேலும் வெகு சிலருக்கே அதாவது ஒரு சதவீதத்தினருக்கும் குறைவானவர்களுக்கு தான் இத்தகைய பாதிப்புகள் நாட்பட்டதாக மாறக்கூடிய வாய்ப்புண்டு. 
 
யாருக்கு இத்தகைய சிக்கல்கள் அதிகம் ஏற்படும்?
 
அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் இத்தகைய பாதிப்புகளும், அதன் அறிகுறிகளும் அதிக அளவில் ஏற்படுகிறது. அதே தருணத்தில் உடலியக்க துணை கோளாறுகள் என வகைப்படுத்தப்படும் சர்க்கரை நோய், ரத்த அழுத்த பாதிப்பு கொலஸ்ட்ரால், இதய பாதிப்பு, நோய் எதிர்ப்பு திறன் குறைவு, உடல் பருமன் போன்ற பாதிப்புகள் இருப்பவர்களுக்கு இவை அதிகம் ஏற்படும் சாத்தியமுண்டு.  அதே தருணத்தில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கும் இத்தகைய  நரம்பியல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம். 
 
நரம்பியல் பாதிப்புகள் ஏன் ஏற்படுகின்றன?
 
கொரோனா வைரஸ் தொற்று எம்முடைய நுரையீரல்  மற்றும் சுவாச மண்டலப் பகுதியை மட்டும் பாதிக்காமல், உடலில் உள்ள நரம்பு மண்டலங்களை நேரடியாக பாதித்து, சிதைக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று உடலின் அனைத்து இயக்கங்களையும் பாதிக்கும் திறன் கொண்ட ஒரு வைரஸ் தொற்று. Renin Angiotensin Mechanism என்ற சிஸ்டத்தையும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பதால் இத்தகைய நரம்பியல் குறைபாடுகள் உருவாகின்றன.
 
இதற்குரிய சிகிச்சை என்ன?
 
பதற்றம், பயம், கவலை, விரக்தி, படபடப்பு உள்ளிட்ட மனம் தொடர்பான பக்க விளைவுகளுக்கு மருத்துவரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன் உற்சாகமான மனநிலைக்குரிய  வாழ்க்கை நடை முறையை வகுத்துக் கொண்டு, அதனை உறுதியாக பின்பற்ற வேண்டும், அத்துடன் மாலை நேரத்தில் பூங்கா போன்ற இயற்கை சூழலில், சூரிய ஒளி எம் மீது படும் வகையில் குறைந்த பட்சம் 30 நிமிடமாவது நடைப்பயிற்சியை மேற் கொள்வது..., இதற்கான முழுமையான நிவாரண சிகிச்சையாகும். இதனுடன் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி ஆகியவற்றையும் கடைபிடிக்க வேண்டும். மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பட்டியலிட்டுக் கொண்டு மேற்கொள்ளுங்கள். சிலருக்கு இதன்போது கொர்போஹைட்ரேட் மற்றும் கலோரி குறைவான உணவுகளை குறைத்தும், கொழுப்புச்சத்து மற்றும் புரதசத்து அதிகமுள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலமும் இதனை கட்டுப்படுத்தலாம் என பரிந்துரைக்கிறார்கள்.  ஏனெனில் கொர்போஹைட்ரேட் மற்றும் கலோரி அதிகமான உணவுகளை உண்பதன் மூலம், எம்முடைய உடலில் கார்பன் டை ஒக்சைடின் உற்பத்தியின் அளவு அதிகரிக்கும். கார்பன் டை ஓக்ஸைடின் அளவு அதிகரித்தால், அதனை வெளியேற்றுவதற்கு எம்முடைய நுரையீரலின் செயல்பாடு அதிகரிக்கவேண்டும். ஏற்கனவே கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு, செயற்றிறன் குறைந்திருக்கும் நுரையீரலுக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும். அதனால் நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக இத்தகைய உணவைத் தவிர்த்து, கொழுப்பு மற்றும் புரதச்சத்து மிகுந்த உணவை எடுத்துக் கொள்வது நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். நரம்பியல் தொடர்பான சிகிச்சைக்கு பல துறை நிபுணர்களின் ஒருங்கிணைப்பும், ஆலோசனையும் அவசியம் என்பதை அனைவரும் அறிவர். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 9156633311 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்
 
சந்திப்பு: அனுஷா

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top