முதியவர்களுக்கு இரவு நேரத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பிற்குரிய சிகிச்சை!
Posted on 10/05/2022
இன்றைய தேதியில் எம்முடைய இல்லங்களில் இருக்கும் மூத்த உறுப்பினர்களுக்கு மாதத்தில் இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ இரவு நேரத்தில் பாதம் மற்றும் கால் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. அதிலும் கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு இத்தகைய தசைப்பிடிப்பு உண்டாவது அதிகம். இதன் போது ஏற்படும் வலியும் அதிகமாக இருக்கும். இதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான முறைகளை மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.
இத்தகைய தசைப்பிடிப்பை மருத்துவ மொழியில் Night time leg cramps என்று வகைப்படுத்துவர். பெரும்பாலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே இத்தகைய பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் இத்தகைய பாதிப்பால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். சிலருக்கு இதன்போது தசைப்பிடிப்பு ஏற்பட்டு, கால்களின் அமைப்பு சற்று வேறுபட்ட நிலையில் இருக்கும். வலியும் தாங்க இயலாமல் இருக்கும். இந்த வலி, சில மணித்துளிகள் முதல் சில மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் தன்மை கொண்டவை. சிலருக்கு இத்தகைய பாதிப்பின் பின்னரான வலிகள் சில நாட்கள் வரை நீடிக்கும். முதலில் இத்தகைய பாதிப்பு, உடலில் வேறு ஏதேனும் பாதிப்பின் அறிகுறிகள் இல்லை என்பதை உறுதியாக உணர்ந்து கொள்ளுங்கள்.
இத்தகைய பாதிப்பு 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது என்பதால், இத்தகைய காலகட்டத்தில் இவர்களுடைய ஹோர்மோன் சுரப்பியில் ஏற்படும் மாற்றங்களே காரணம் என அவதானிக்கப்படுகின்றது. வேறு சிலருக்கு முதுமையின் காரணமாக Tendon எனப்படும் தசைநாரின் சுருங்கி விரியும் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு இத்தகைய பாதிப்பை உண்டாக்குகிறது. வேறு சிலருக்கு மன அழுத்தம் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படும். சிலர் தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ளும் போதும் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு டீஹைட்ரேஷன் எனப்படும் நீர்ச்சத்து குறைபாடு உண்டானாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படும். வேறு சிலருக்கு அவர்களின் உடலில் இயல்பான அளவில் இருக்க வேண்டிய பொட்டாசியம் சத்து, சத்தின் அளவு குறையும் போதும் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்.
மது அருந்துபவர்கள் மற்றும் புகை பிடிப்பவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவது, Flat foot எனப்படும் தட்டையான பாத அமைப்பை கொண்டவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இதற்கு மருத்துவரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் படி எளிமையான முறையில் சிகிச்சை மேற்கொண்டால் முழுமையான நிவாரணம் கிடைக்கும்.ஆறு முதல் எட்டு கோப்பை அளவிற்கு தண்ணீர் அருந்துவதும் இதற்குரிய நிவாரணமாகும். இயன்முறை மருத்துவர்கள் அறிவுறுத்தும் இயன்முறை சிகிச்சையை மேற்கொண்டும் நிவாரணம் பெறலாம்.
டாக்டர். அரவிந்த்
தொகுப்பு: அனுஷா
Tags: News