Ewing sarcoma என்ற புற்றுநோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை
Posted on 25/04/2022
இன்றைய தேதியில் எம்மில் பலரும் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி வருவது அதிகரித்து வருகிறது. அதிலும் கொரோனாத் தொற்றுக்குப் பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஈவீங் சர்கோமா எனப்படும் அரியவகை புற்றுநோய் பாதிப்பிற்கு ட்யூப்லெஸ் வாட்ஸ் என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கண்டறியப்பட்டிருக்கும் நவீன சத்திர சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம் என கண்டறியப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக மருத்துவ நிபுணர் அபிஜித் தாஸ் விளக்கமளிக்கையில்,' உலகில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு முழுமையாக நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய அறிவியல் தொழில் நுட்பங்கள் மூலம் நவீன சிகிச்சைகள் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் Ewing sarcoma எனப்படும் அரியவகை புற்றுநோயால் தெற்காசிய நாட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய புற்றுநோய், எம்முடைய உடலிலுள்ள எலும்புகளையும், அதனை சுற்றியுள்ள மென்மையான திசுக்கள், குருத்தெலும்பு, நரம்புகள் ஆகியவற்றை பாதிக்கிறது. சிலருக்கு இத்தகைய புற்றுநோய் ஏற்பட்டவுடன் நுரையீரல் பகுதியில் கட்டிகள் உருவாகும். இவை ரத்த ஓட்டத்தின் வழியாக நுரையீரலுக்குள் பரவும் வீரியம் கொண்டவை. சிலருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் நுரையீரல் பகுதியில் 10 செ. மீ அளவிற்கு கட்டிகள் உருவாகக்கூடும். இதனை சாதாரண சத்திரசிகிச்சையின் மூலமாகவோ, கீமோதெரபி மூலமாகவோ முழுமையாக அகற்ற இயலாது. இதற்கு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் tubeless video assisted thoracic surgery என்ற நவீன சத்திரசிகிச்சையின் மூலம் புற்றுநோய் கட்டிகளை முழுமையாக அகற்றலாம் . இத்தகைய சிகிச்சையின்போது குறைந்த அளவில் துளையிடப்படுவதுடன், ஊடுருவல் பாணியிலான சிகிச்சையும் வழங்கப்படுவதால் புற்றுநோய் கட்டிகள் துல்லியமாக அழிக்கப்படுகின்றன. மேலும் இத்தகைய சிகிச்சையின்போது வலி குறைவாக இருப்பதுடன் ரத்த இழப்பும் குறைவு. அத்துடன் விரைவாக குணமடைவதால் நோயாளிகள் இதனை வரவேற்கிறார்கள்.' என்றார்.
தொகுப்பு: அனுஷா
Tags: News