கொரோனாவிற்கு பிறகு ஏற்படும் எலும்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை!

கொரோனாவிற்கு பிறகு ஏற்படும் எலும்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை!

கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்ட பிறகு பலருக்கும் சில அறிகுறிகள் மாதக்கணக்கில் நீடித்திருக்கும். அதாவது சிறிது தூரம் நடந்தால் சோர்வு ஏற்படுவதோ.. அல்லது மாடிப்படி ஏறும் போது இதயத்துடிப்பு அதிகரிப்பதோ, மூச்சிரைப்பு ஏற்படுவதோ உண்டாகும். வேறு சிலருக்கு நெஞ்செரிச்சல், சோர்வு என பல அறிகுறிகள் ஏற்படலாம். இந்நிலையில் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த பலருக்கும் avascular necrosis எனப்படும் எலும்பு திசு அழிவு அல்லது எலும்பு பாதிப்பு ஏற்படுகிறது இதுகுறித்த மருத்துவரீதியான தகவல்களையும், விளக்கங்களையும் அறிந்து கொள்வதற்காக சென்னையை சேர்ந்த டாக்டர். வினோத் குமார், M.S., எலும்பு சத்திர சிகிச்சை நிபுணர் அவர்களை சந்தித்தோம்.

கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பின்னரான போன் டெத் எனப்படும் அவஸ்குலர் நெக்ரோசிஸ் பாதிப்பு குறித்து...?
 
கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த 30 வயது முதல் 50 வயது வரை உள்ள பெரும்பாலானவர்களுக்கு இந்த போன் டெத் எனப்படும் அவஸ்குலர் நெக்ரோசிஸ் என்ற எலும்பு திசு அழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்ட மூன்று மாதத்திலிருந்து ஆறு மாத காலத்திற்குள் இதற்கான அறிகுறிகள் உண்டாகின்றன.
 
எம்முடைய கை மற்றும் கால் பகுதிகளில் நீளமாக இருக்கும் எலும்புகளில் Epiphysis மற்றும் Diaphysis என்ற பகுதி எலும்பையை இணைக்கும் Metaphysis என்ற பகுதி இயங்குகிறது. இந்த மூன்று பகுதிகளுக்கும் ஒரே சீரான ரத்த ஓட்டம்  நடைபெறுவதில்லை. அதனதன் இயக்கத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் சீராக சென்று கொண்டிருக்கும். இந்நிலையில் இந்த மூன்று பகுதிகளில் ஏதேனும் ஒரு பகுதிக்கு, சீராக செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தில், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அங்குள்ள எலும்பு திசுக்கள் அழிகின்றன. இதனை மருத்துவ மொழியில் நெக்ரோசிஸ் என்பர். இத்தகைய பாதிப்பு உருவாகுவதற்கு பல காரணங்கள் உண்டு. ரத்த ஓட்டம் தடை படுவதன் காரணமாக எலும்பு திசுக்கள் அழிவதை தான் அவஸ்குலர் நெக்ரோசிஸ் என குறிப்பிடுகிறார்கள்.. சுருக்கமாக மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இதனை போன் டெத் ( Bone Death) என்றும் குறிப்பிடுகிறார்கள்.
 
தற்போது இந்த பாதிப்பு அதிகரித்திருக்கிறதே ஏன்? அதிலும் குறிப்பாக இடுப்பு எலும்புப் பகுதி பாதிக்கப்படுவதேன்?
 
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஸ்டீராய்டு மருந்துகளின் எதிர்விளைவாக இத்தகைய பாதிப்பு தற்போது அதிகரித்திருக்கிறது என்பதும்  அண்மைய ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. 
 
இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தோள்பட்டை, இடுப்பு, கால் மூட்டு, மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் உள்ள எலும்புகளில் போன் டெத் என்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் முப்பது முதல் ஐம்பது வயது வரை உள்ளவர்களில் அதிகமானவர்களுக்கு இடுப்பு எலும்பில் தான் இத்தகைய பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டிருக்கிறது. இடுப்பு எலும்பில் உள்ள பந்து கிண்ண மூட்டு பகுதிக்கு இயல்பாகவே ரத்த ஓட்டம் குறைவாக தான் செல்லும்.. பந்து போல் உள்ள பந்து கிண்ண மூட்டு பகுதியின் மேல் பகுதி முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. அதனால் அதன் இயக்கத்தில் தடை, ஏற்பட்டு வலி உருவாகிறது. இதன் காரணமாக குனிந்து நிமிரலோ,  உட்கார்ந்து எழுவதோ, சம்மணமிட்டு அமர்ந்து பசியாறுவதோ சிரமமாக இருக்கும்.
 
மருத்துவ ரீதியிலான விளக்கம்? 
 
கொரோனா சிகிச்சையின் போது நாம் எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய்டு மருந்துகள், எம்முடைய மூட்டு பகுதிகளில் உள்ள செல்களை தாக்குகிறது. எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் செல்கள், ரத்த செல்களாகவும், எலும்பு செல்களாகவும், நோய் எதிர்ப்பு செல்களாகவும் மாற்றமடையக் கூடிய திறன் பெற்றவை. இந்த நிலையில் நாம் எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய்டு மருந்துகள் இந்த எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் செல்களை உடலின் ஆரோக்கியத்திற்கு பயனற்ற கொழுப்பு செல்களாக மாற்றி விடும். இதன் காரணமாக உடலில் இயல்பாக இருக்க வேண்டிய கொழுப்பு செல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், எலும்புகளில் அழுத்தம் அதிகரித்து, இத்தகையய பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் எலும்புகளுக்கு இடையே சீராக நடைபெறும் ரத்த ஓட்டம் முழுமையாக தடைப்பட்டு எலும்பு செல்களின் அழிவிற்கும் காரணமாகிறது.
 
ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொண்டவர்களுக்கு மட்டும் தான் இத்தகைய பாதிப்பு ஏற்படுமா?
 
இல்லை. கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட, அவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு உண்டு. ஏனெனில் கொரோனா தொற்று நுரையீரல் பகுதிகளில் உள்ள சிறிய ரத்தக் குழாய்களில், ரத்தக் கட்டிகளை உருவாக்கி பாதிப்பை ஏற்படுத்துவதால், இடுப்பு எலும்பு களுக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. எனவே இதன் காரணமாகவும் போன் டெத் எனப்படும் எலும்பு திசு அழிவு பாதிப்பு ஏற்படும். 
 
இதனை எப்படி உணர்ந்து கொள்வது?
 
கொரனோ தொற்று பாதிப்பு ஏற்பட்டு மீண்டும் நாளாந்த வாழ்க்கைக்கு திரும்பியவர்கள் உடற்பயிற்சி செய்யும்போதும், நடைபயிற்சி செய்யும் போதும் அல்லது வேறு ஏதேனும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டால், அது இதன் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். இந்த வலி சீராக அதிகரித்து உங்களின் நாளாந்த பணிகளைச் செய்வதற்கு சிரமமான நிலையை உருவாக்கும். சிலருக்கு இடுப்பு வலியுடன் தோள்பட்டை வலி, மணிக்கட்டு வலி, கால் மூட்டு வலி போன்றவையும் ஏற்படக்கூடும்.
 
பரிசோதனை மற்றும் சிகிச்சை குறித்து..?
 
மேற்கூறிய அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மருத்துவரை சந்தித்து அவர்களது பரிந்துரையின்பேரில் எம் ஆர் ஐ ஸ்கேன் என்ற பரிசோதனையை மேற்கொண்டு, இதன் பாதிப்பை உறுதிப்படுத்தலாம். போன் டெத் எனப்படும் எலும்பு திசு அழிவு பாதிப்பு, நான்கு நிலைகளாக மருத்துவ நிபுணர்களால் வரையறுக்கப்படுகிறது. இந்த பாதிப்பு முதல் இரண்டு நிலைகளில் இருந்தால் மருந்து மற்றும் மாத்திரைகளின் மூலம் குணப்படுத்த இயலும். மூன்றாவது அல்லது நான்காவது நிலையில் கண்டறியப்பட்டால், சத்திர சிகிச்சை மூலமாகவும், இடுப்பு எலும்பு மூட்டு மாற்று சத்திர சிகிச்சை மற்றும் முழு இடுப்பு எலும்பு மாற்று சத்திரசிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்கலாம். இத்தகைய சத்திரசிகிச்சையின் போது எலும்புகளுக்கிடையே இருக்கும் கூடுதலான அழுத்தத்தை துளையிட்டு குறைப்பர். பிறகு வேறு சிலருக்கு இதன்போது ரத்த நாள அடைப்பை சீராக்குவர். கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமானவர்கள் ஒரு வருட காலம் வரை புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் முற்றாக தவிர்க்க வேண்டும் இதன் மூலம் இதன் பாதிப்பை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த இயலும். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 63699 65537 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top