குரோமோசோம் குறைபாடுகளை கண்டறியும் நவீன பரிசோதனை

குரோமோசோம் குறைபாடுகளை கண்டறியும் நவீன பரிசோதனை

இன்றைய திகதியில் பெண்கள் திருமணத்திற்கு பிறகு இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது சவாலான காரியமாக மாற்றம் பெற்றிருக்கிறது. 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு இயற்கையான முறையில் மகப்பேறு என்பது சாத்தியமில்லாமல் சென்றுவிட்டது. மேலும் வளர்ச்சியடைந்திருக்கும் மருத்துவ தொழில்நுட்பம் காரணமாக தற்போது மகப்பேறு என்பது எளிமையாக்கப்பட்டிருக்கிறது. வயிற்றில் இருக்கும் சிசுவின் ஆரோக்கியம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்த அனைத்து விடயங்களையும் பரிசோதனைகளின் மூலமாகவே கண்டறிய இயலும். இந்நிலையில் டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மூளை வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே அத்தகைய குறைபாட்டினை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள் அறிமுகமாகியிருக்கிறது. இதுகுறித்து இத்துறை நிபுணரான டொக்டர். தீப்தி M.S. மருத்துவ நிபுணர் அவர்களிடம் விளக்கமளிக்குமாறு கேட்டோம்.

கருத்தரித்திருக்கும் பெண்களுக்கு எத்தகைய பரிசோதனை அவசியமாகிறது..?
 
கருத்தரித்திருக்கும் பெண்களுக்கு முதல் மூன்று மாதம், இரண்டாவது மூன்று மாதம், மூன்றாவது மற்றும் இறுதி கட்ட மூன்று மாதம் ஆகிய காலகட்டங்களில் ஸ்கேன் பரிசோதனை அவசியமாகிறது. இந்த பரிசோதனையின் மூலம் குழந்தையின் வளர்ச்சி இயல்பான அளவில் இருக்கிறதா? அல்லது குழந்தை ஏதேனும் குறைபாட்டுடன் பிறக்க சாத்தியம் இருக்கிறதா..? என்ற முடிவினை இத்தகைய பரிசோதனைகளின் மூலம் துல்லியமாக அவதானிக்கலாம்.
 
டவுன் சிண்ட்ரோம் பாதிப்புள்ள குழந்தைகளை கருவில் இருக்கும் போது கண்டறிய இயலுமா..? இதற்கான பரிசோதனை என்ன.?
 
கோரியானிக் வில்லஸ் சாம்பிளிங் எனப்படும் நஞ்சுக்கொடி பரிசோதனையை இதற்காக விஷேடமாக மேற்கொள்வோம். இத்தகைய பரிசோதனை குறிப்பிட்ட பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் மேற்கொள்வோம். Prenatal biochemistry screen test என்ற பரிசோதனையின் முடிவிற்கு பிறகு, மூளை வளர்ச்சி நிறைவடைந்திருக்கிறதா? இல்லையா? என்பதை பரிசோதிக்க மேற்கொள்கிறோம்.  கருவுற்றிருக்கும் பெண்களின் வயது 37 ஐ விட அதிகமாக இருந்தாலும், இத்தகைய பரிசோதனையை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். முதல் குழந்தை டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மூளை வளர்ச்சி குறைபாட்டுடன் பிறந்திருந்தால், அவர்கள் இரண்டாவது முறையாக கருத்தரிக்கும் போது இத்தகைய பரிசோதனையை மேற்கொள்ள வலியுறுத்துவார்கள். சில பெண்களுக்கு பிரத்தியேக மரபணு கோளாறுகள் ஏதேனும் இருந்தாலும், இத்தகைய பரிசோதனையை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

நஞ்சுக்கொடி பரிசோதனையின் நோக்கம் குறித்து.?
 
பொதுவாக ஆணிடமிருந்து 23 குரோமோசோம்களும், பெண்ணிடமிருந்து 23 குரோமோசோம்களும் இணையாக பிரிந்துதான் கரு உருவாகிறது. இதில் 13, 18, 21 ஆகிய குரோமோசோம்களில் ஏதேனும் மாறுபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. இந்த குறிப்பிட்ட குரோமோசோம்களில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால், மூளை வளர்ச்சியின் நிலைப்பாட்டிலும் மாற்றம் ஏற்படும். இந்த பரிசோதனையில் இந்த குறிப்பிட்ட குரோமோசோம்களை துல்லியமாக அவதானித்து கண்டறிந்து, அதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? என்பதை அவதானிப்பார்கள்.

மருத்துவர்கள் இத்தகைய பரிசோதனையை யாருக்கு பரிந்துரைப்பதில்லை.?
 
பேறு காலத்தின்போது காய்ச்சல், நோய்த்தொற்று, ரத்தப்போக்கு, இயல்பான அளவைவிட கூடுதலாக வெள்ளைப்படுதல்... போன்ற பாதிப்புள்ள பெண்களுக்கு, இத்தகைய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

கோரியானிக் வில்லஸ் பரிசோதனையின் நடைமுறை குறித்து..?
 
இத்தகைய பரிசோதனையின்போது அல்ட்ராசவுண்ட் மூலம் குழந்தையின் உடல் உறுப்புகள், அதன் வளர்ச்சி, அதன் அமைவிடம்... உள்ளிட்ட பலவற்றை முதலில் அவதானிப்பார்கள். மூக்குத் தண்டு வளர்ச்சி, கழுத்து பின்னரான திரவ நிலை, உமிழ்நீர், நஞ்சுக்கொடி, நஞ்சுக்கொடி அமைப்பு... போன்றவற்றை துல்லியமாக அவதானிப்பர். இத்தகைய பரிசோதனையின் போது சிலருக்கு வலி உண்டாகும் என்பதால், குறைந்த அளவிலான மயக்கத்தை செலுத்துவர். நஞ்சுக்கொடியின் இருப்பிடத்தை துல்லியமாக அவதானித்து, அங்கு ஒரு நுட்பமான ஊசியை செலுத்தி, அங்கிருந்து சிறிது திரவத்தை பரிசோதனைக்காக எடுத்துக் கொள்வர். அதனை மேலதிக விவரங்களுக்காக மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்புவர். 

இதன் போது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா..?
 
பரிசோதனையின் போது வயிற்றில் இருக்கும் சிசுவின் இதயத்துடிப்பைக் மருத்துவர்கள் தொடர்ந்து, அதற்குரிய கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்வர். இந்த பரிசோதனையில் நஞ்சுக்கொடியில் உள்ள திரவங்கள் மட்டுமே பரிசோதனைக்கு எடுப்பதால், வேறு எந்த பின்விளைவும் ஏற்படாத வகையில் முழு முழுமையான விழிப்புணர்வுடன் மருத்துவர்கள் எடுப்பார்கள். அதிகபட்சம் 15 முதல் 30 நிமிடங்களில் முடிவடையும் இந்த பரிசோதனையில், சில தருணங்களில் மிகக் குறைவான அளவில் இரத்த இழப்பு ஏற்படக் கூடும்.. வயிற்றில் வளரும் சிசுவின் ரத்த வகையும், அதனை சுமக்கும் தாயின் ரத்த வகையும் வேறு வேறாக இருப்பதற்கான வாய்ப்பு உண்டு என்பதால், மருத்துவர்கள் முழுமையான கவனத்துடன் பின்பற்றுவார்கள். இருப்பினும் இவ்விடயத்தில் தவறு நிகழாதிருக்க, மருத்துவ நிபுணர்கள் ஊசி வடிவில் தற்காப்பு மருந்தினை செலுத்துவர். மேலும் இந்தப் பரிசோதனை முடிந்து, தொடர்ந்து ஏழு நாட்கள் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் கர்ப்பிணிப்பெண்கள் இருப்பர்.
 
இந்த பரிசோதனையின் முடிவுகள் மருத்துவ ஆய்வகத்திலிருந்து ஒருவார கால அவகாசத்திற்குள் கிடைத்துவிடும். அந்த முடிவில் 90 சதவீத அளவிற்கு பிறக்கும் குழந்தைகளுக்கு டவுன் சிண்ட்ரோம் எனப்படும் பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பது துல்லியமாக தெரிந்து விடும். மேலும் துல்லியமான முடிவுகள் வெளியாவதற்கு ஒரு மாத கால அவகாசமாகும்.
 
இந்த பரிசோதனை நிறைவடைந்த ஒரு வார காலத்திற்குள் கர்ப்பிணி பெண்களுக்கு ஏதேனும் காய்ச்சல் ஏற்பட்டாலும்... ஊசி செலுத்தி இடங்களில் ரத்தக் கசிவு தோலுக்கு அடியில் ஏற்பட்டிருந்தாலும்... அதிகளவு உதிரப்போக்கு ஏற்பட்டாலும்... பனிக்குடம் உடைந்து விட்டது போல் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
 
மிக அரிதாக சில பெண்களுக்கு இத்தகைய பரிசோதனை முடிவுகளில் துல்லிய தன்மை வெளிப்படுவதில்லை. ஏனெனில் இத்தகைய பரிசோதனை நஞ்சுக்கொடியில் மேற்கொள்ளப்படுகிறதேத் தவிர, குழந்தையின் செல்களிலிருந்து பரிசோதனை மேற்கொள்ள படுவதில்லை. இத்தகைய பரிசோதனை அதிகபட்சமாக 13 முதல் 14 வார கால கட்டத்திற்குள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். சில பெண்கள் இதற்கு பிறகு தங்களுக்கு டவுன் சிண்ட்ரோம் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் அவர்களுக்கு குழந்தையின் உமிழ்நீர் பரிசோதனையை மேற் கொள்வார்கள். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 00914443594620 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top