சர்க்கரை நோயினால் உறுப்புகளை இழக்காமல் பாதுகாக்க இயலுமா?

சர்க்கரை நோயினால் உறுப்புகளை இழக்காமல் பாதுகாக்க இயலுமா?

இன்றைய திகதியில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமாக உயிரிழப்பை எதிர்க் கொண்டவர்களில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்றும், கொரோனாத் தொற்றிற்கு பிறகு அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு அதிகமாக ஆளாகுபவர்களில் சர்க்கரை நோயாளிகளே அதிகம் என்றும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் உயிருக்கும், உடல் உறுப்புகளின் பாதிப்புகளுக்கும், இழப்புகளுக்கும் காரணமாகும் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது எப்படி? என்பது குறித்தும், சர்க்கரை நோயால் உறுப்புகளை இழக்காமல் எம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்தும் எம்மில் பலருக்கும் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. இதனை மருத்துவரீதியான விளக்கத்துடன் களைவது எப்படி என்பது குறித்து சென்னையை சேர்ந்த டொக்டர் ராஜேஷ், M.D., மருத்துவ நிபுணர்.  அவர்களைச் சந்தித்து கேட்டோம்.

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது..?
 
பொதுவாக எம்மில் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும், அது தொடர்பான பரிசோதனையை மருத்துவர்களும் அல்லது குடும்ப உறுப்பினர்களும் வலியுறுத்திய பிறகுதான் மேற்கொள்கிறார்கள். அவர்கள் ஃபாஸ்டிங் சுகர் எனப்படும் காலையில் காலியான வயிற்றுடன் இருக்கும்பொழுது ஒருமுறையும், பிறகு காலை உணவு சாப்பிட்ட பின் ஒன்றரை மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள் ஒரு முறையும் சர்க்கரை அளவு குறித்த பரிசோதனையை மேற்கொள்கிறார்கள். ஆய்வகங்களில் சர்க்கரையின் அளவு குறித்த விவரங்களை தெரிவித்த பின்னரும், ‘200 தான் இருக்கிறது. எனவே இவை கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது’ என்று எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் சர்க்கரை நோய் எப்போதும் எந்தவித அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. அவை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கூட பாதிப்பை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் சர்க்கரையின் அளவை நாம் பரிசோதனை செய்து கொண்ட பிறகு அவை கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெற வேண்டும். 
 
ஏனெனில் சர்க்கரையின் அளவு எம்முடைய உடலில் ஒவ்வொரு தருணங்களில் வெவ்வேறு அளவுகளில் அதிகமாகவும், குறைவாகவும் இருக்கும். இத்தகைய தருணங்களில் அவை Advanced Glycation End Products என்ற முறையில் குருதியில் கலந்து, சில வேதியல் மாற்றங்களை பெற்று, ரத்தக்குழாய்களை பாதித்து, பிறகு இதயத்தை தாக்குகிறது. சிலருக்கு நரம்புகளில் பாதித்து கால் பாதங்களில் எரிச்சலை உண்டாக்குகிறது. பிறகு ஆறாத புண்களை ஏற்படுத்தி கால்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டிய சூழலை உருவாக்குகிறது.வேறு சிலருக்கு ரத்த குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, அதனூடாக சிறுநீரகத்தை தாக்கி அங்கும் சிறுநீரக செயலிழப்பை உருவாக்குகிறது. டயாலிசிஸ் எனப்படும் சிகிச்சை பெறுபவர்களில் 90 சதவீதத்தினர் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாதவர்கள் தான். வேறு சிலருக்கு கண் நரம்புகளை பாதித்து பார்வை திறனை இழக்கச் செய்வதும் சர்க்கரை நோய்தான். இதுபோன்று உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் இலக்கு வைத்து, சர்க்கரை நோய் பாதிப்பை உண்டாக்கும். ஆனால் எம்முடைய உடலில் உள்ள உறுப்புகளை இழக்கும் அளவிற்கு சர்க்கரையின் அளவு குறித்தும், அதன் கட்டுப்பாட்டு அளவு குறித்தும் நான் தெரிந்து வைத்துக்கொண்டால் உடலுறுப்புகளை இழக்க வேண்டியதிருக்காது. அதற்காக மருத்துவர்கள் HbA1c என்ற பரிசோதனையை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

இந்த பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் பின்னணி என்ன..?
 
ஃபாஸ்டிங் சுகர் மற்றும் போஸ்ட்பிரண்டியல் சுகர் என்ற அளவு எம்முடைய ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை துல்லியமாக அவதானிப்பதில்லை. தோராயமாகவும், மாற்றத்திற்கு உட்பட்டதாகவும் சில தருணங்களில் அமைந்திருக்கும். ஆனால் HbA1c என்ற பரிசோதனையில் ஹீமோகுளோபினில் உள்ள கிளைகோசைலேஷன் என்ற சர்க்கரை படிமங்களை துல்லியமாக  அளவிட முடியும். இதன் மூலம் கடந்த மூன்று மாத காலத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கண்டறிய இயலும். இத்தகைய பரிசோதனையின் மூலம் தான் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லையா? என்பதை துல்லியமாக அவதானிக்க இயலும். இந்தப் பரிசோதனையின் முடிவில் ஒருவருக்கு ரத்த சர்க்கரையின் அளவு 6.5 என்ற எண்ணிக்கைக்குள் இருந்தால், அவர் தன்னுடைய ரத்த சர்க்கரையின் அளவை சரியான அளவிற்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று கூற இயலும். இதே அளவில் அவர் தன்னுடைய ரத்த சர்க்கரையின் அளவை பராமரித்தால், அவருக்கு உடலில் உள்ள எந்த உறுப்பும் பாதிக்காது. இழக்க வேண்டியதிருக்காது. இந்த அளவு 7.5 என்ற அளவில் வரை கட்டுப்பாட்டில் இருக்கிறது என கூறலாம். வேறு சிலர் ஃபாஸ்டிங் சுகர் மற்றும் பிபி சுகர் ஆகிய பரிசோதனைகளை குளுக்கோமீற்றர் என்ற கருவியின் மூலம் மேற்கொண்டு, அதன்மூலம் இருநூறு என்ற அளவிற்குள் ரத்த சர்க்கரையின் அளவு இருக்கிறது என்று தெரிந்து கொண்டவர்கள், நாளடைவில் சர்க்கரை நோயின் தாக்கத்திற்குள்ளாக வாய்ப்பிருக்கிறது. எனவே hpa1c என்ற பரிசோதனையை ஒவ்வொருவரும் ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ மேற்கொண்டு ரத்த சர்க்கரையின் அளவை தெரிந்து கொண்டு அவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
 
சர்க்கரையின் அளவை கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் குளுக்கோ மீற்றர் என்ற கருவியின் செயல்பாடு குறித்து..?
 
வீட்டிலிருக்கும் சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்வதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த குளுக்கோ மீற்றர் என்ற கருவி. இந்தக் கருவி டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. இவர்கள் சர்க்கரை நோய்க்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள், உணவுகள், ஊசிகள் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா? என்பதை தெரிவிக்கும் கருவியாகவும் இவை செயல்படுகிறது. இந்தக் கருவியின் மூலம் கிடைக்கப்படும் ரத்த சர்க்கரையின் அளவு 15 முதல் 20 சதம் வரை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதாவது ஒருவரின் ரத்த சர்க்கரையின் அளவு ‘100’ ஆக இருந்தால், குளுக்கோ மீற்றரில் 115 அல்லது 120 எனக் காட்டும். இத்தகைய குளுக்கோமீற்றர்களை சர்க்கரை நோயாளிகள் தான் தங்களது நாளாந்த ரத்த சர்க்கரையின் அளவை தோராயமாக கண்டறிய பயன்படுத்துகிறார்கள். அத்துடன் குளுக்கோமீற்றர் எம்முடைய விரல்களிலுள்ள மிக சிறிய ரத்த குழாய்களிலிருந்து ரத்தச் சர்க்கரையின் அளவைப் பரிசோதிக்கிறது.‌ இதன்போது குருதியுடன் சீரம் உள்ளிட்ட வேறு திரவங்களும் கலந்திருக்கும். இதன் காரணமாகவும் ரத்த சர்க்கரையின் அளவு மாறுபடும். இதன் போது பயன்படுத்தப்படும் ஸ்ட்ரீப், தொழில்நுட்பம், நோயாளியின் உடல் வெப்ப நிலை ஆகிவற்றை பொருத்தும் இவற்றில் மாற்றம் உண்டாகலாம். எனவே குளுக்கோ மீற்றரிலிருந்து பெறப்படும் ரத்த சர்க்கரையின் அளவு, சிகிச்சையில் இருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு பொருத்தமானதுதான் எனக் கூறலாம்.
 
டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த பரிசோதனை பலனளிக்குமா.?
 
இவர்களுக்கு hba1c என்ற பரிசோதனையை விட தற்போது மருத்துவ துறையில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் CGM ( Continuous Glucose Monitoring) என்ற பரிசோதனை துல்லியமான முடிவுகளை அறிவிக்கிறது. இதன்போது இத்தகைய மின்னணு கருவி ஒன்று எம்முடைய உடலில் ஏதேனும் ஒரு இடத்தில் பொருத்தப்படுகிறது. பிறகு குளுக்கோமீற்றர் போன்ற ஒரு கருவி நம்மிடம் வழங்கப்படும். எப்போதெல்லாம் சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ள வேண்டுமோ.., அப்போதெல்லாம் அந்த குளுக்கோமீற்றரை இந்தக் கருவியின் அருகே கொண்டு சென்றால், உடலின் ரத்த சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் நாள் முழுவதும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வகையில் அதிகரித்தும், குறைந்தும் இருக்கிறது என்பதை கண்டறியலாம். இதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் எம்மால் ஆரோக்கியத்துடன் கட்டுப்படுத்த இயலும். இதனுடன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று உணவு முறையை மாற்றி அமைத்துக் கொண்டால் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, ஆயுள் முழுவதும் எந்த உடல் உறுப்புகளையும் இழக்காமல், மகிழ்ச்சியுடன் வாழ இயலும். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 8296263415 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top