Guillain Barrey Syndrome எனப்படும் அதிவிரைவான நரம்புத்தளர்ச்சி பாதிப்புக்குரிய சிகிச்சை
Posted on 02/04/2022
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் எம்மில் பலருக்கும் அதிவிரைவான நரம்புத்தளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக முகவாத பாதிப்பிற்கு ஏராளமானவர்கள் ஆளானார்கள். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கொரோனாத் தொற்று காரணமாக ஓட்டோஇம்யூன் டிசீஸ் என்ற பாதிப்பும் ஏற்படும் என கண்டறியப்பட்டது. குல்லியன் பாரே சிண்ட்ரோம் என்ற அதிவிரைவான நரம்புத்தளர்ச்சி பாதிப்பின் காரணமாக, நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலமே, ஆரோக்கியமான செல்களை பாதிக்கிறது.
எம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம், நாம் உடல்ரீதியாக பாதிக்கப்படும் பொழுது அதனை எதிர்த்து போராடி நல்ல பலனை வழங்கக்கூடிய தன்மை கொண்டது. ஆனால் சில தருணங்களில் எதிர்பாராவிதமாக இந்த நோய் எதிர்ப்பு மண்டலமே நமக்கு எதிராக செயல்படத் தொடங்கும். அப்படி செயல்படும் போது ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று தான் இந்த அதிவிரைவான நரம்புத்தளர்ச்சி பாதிப்பு.
இத்தகைய அதிவிரைவான நரம்புத்தளர்ச்சி பாதிப்பு, பெரும்பாலனவர்களுக்கு கால் பகுதியில் தான் முதலில் ஏற்படுகிறது குறிப்பாக கெண்டைக் கால் பகுதியில் வலி உண்டாகும். காலில் மதமதப்பு ஏற்படும். பிறகு நடையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும். பிறகு இடுப்பு பகுதி, இரண்டு கால்கள், இரண்டு கைகள் மற்றும் கழுத்துப் பகுதி இறுதியாக சுவாச மண்டலத்தையும் பாதித்து, பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். முக வாதத்தையும் உண்டாக்கும். சிலருக்கு இதன் காரணமாக கண்களை முழுவதுமாக மூட முடியாமல் தவிக்க நேரிடும். சிலரால் வாயை முழுமையாக திறந்து சிரிக்க இயலாத நிலை ஏற்படும்.
கடந்த தசாப்தங்களில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் ஒரு மாத காலத்திற்குப் பிறகு தான் இவை தீவிரமடையும். ஆனால் கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால், ஒரே நாளில் தீவிர நிலையை நோயாளி எட்டி விடுகிறார்கள். இதனை நரம்பியல் செயல்பாடு குறித்த பரிசோதனையை மேற்கொண்டு, எத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அவதானித்த பிறகு, நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளுடன் பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி சிகிச்சையும் வழங்கி, இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணத்தை வழங்குவர்.
டாக்டர். கோட்டீஸ்வரன்
தொகுப்பு: அனுஷா
Tags: News