குழந்தைகளின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு வகைகள்!
Posted on 03/06/2022
பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய காலை உணவை சாப்பிடும் குழந்தைகளின் மன நல ஆரோக்கியம், ஏனைய குழந்தைகளின் மனநல ஆரோக்கியத்தை விட சிறப்பாக இருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இன்றைய திகதியில் உலகம் முழுவதும் கொரோனாத் தொற்று குறித்த அச்சம், இரண்டு தடவை தடுப்பூசி செலுத்திய பிறகும் முழுமையாக விலகவில்லை. குறிப்பாக தெற்காசிய நாடுகளில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு, முழுமையாக நடைமுறையில் இல்லாததால்.., இவர்களின் மன ஆரோக்கியம் குறித்து அவர்களுடைய பெற்றோர்கள் பாரிய கவலை கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களுடைய காலை உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இடம் பெற வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவர்களும் பரிந்துரை செய்திருக்கிறார்கள். ஏனெனில் பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய காலை உணவை சாப்பிடும் குழந்தைகளின் மனநலம் சார்ந்த ஆரோக்கியம், ஏனையவர்களை விட மேம்பட்ட வகையில் இருப்பதை அண்மைய ஆய்வின் மூலம் உறுதி படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
அதே தருணத்தில் பழங்களை மட்டும் காலை உணவாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும், காலை உணவுடன் காய்கறிகளையும், பழங்களையும் இணைத்தே சாப்பிட வேண்டும் என்றும் அவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.
இதற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்பவர்கள், தங்களுடைய குழந்தைகளுக்கு காலை பதினோரு மணி அளவிலும், இரவு உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அதாவது மாலை 7 மணி அளவிலும் பழங்களை சாப்பிடலாம் என்றும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
ஒன்லைன் கல்வி, வீட்டிலேயே தனித்திருத்தல், திறந்தவெளியில் விளையாட அனுமதி கிடைக்காதிருத்தல், உட்கார்ந்தபடியே அதிக மணித்தியாலம் வரை செல்போன் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களுடன் விளையாடிக் கொண்டிருத்தல்... போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகளின் மன ஆரோக்கியம் இயல்பான நிலையை விட பாரிய அளவிற்கு சிதைவுக்குள்ளாகி இருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இவர்களின் மன ஆரோக்கியம் மேம்பட வேண்டும் என்றால், காலை உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இணைத்து வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் பெற்றோர்களை கேட்டுக் கொள்கிறார்கள்.
டாக்டர். ஸ்ரீதேவி
தொகுப்பு: அனுஷா
Tags: News