முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு பாதிப்பிற்குரிய சிகிச்சை
Posted on 20/07/2022
இன்றைய திகதியில் தென்னாசிய நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஸ்பைனல் மஸ்குலர் அற்றோபி எனப்படும் முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு என்ற பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு தற்போது நவீன சிகிச்சை கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு என்பது மரபணு குறைபாட்டின் காரணமாகவோ அல்லது மரபணு காரணமாகவோ ஏற்படும் அரிய பாதிப்பு. எம்முடைய உடலில் அமையப்பெற்றிருக்கும் மோட்டார் நியூரான் புரதம் உற்பத்தி செய்யும் மரபணு மாற்றத்தினால் ஏற்படுகிறது. இதனால் புரதத்தின் உற்பத்தி குறைந்து, தசை நார்களுக்கு தேவையான வலிமை குறைந்து, இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
பிறக்கும் குழந்தைகளில் இத்தகைய பாதிப்பு நான்கு வகையாக ஏற்படுகிறது. சில குழந்தைகளுக்கு உட்காருவதில் சிரமம், தலையை நிமிர்ந்து வைத்திருக்க இயலாத நிலை, தாய் பாலையும், திட மற்றும் திரவ பொருளை விழுங்குவதில் சிரமம், சுவாச சுழற்சியும், அதற்கு உதவும் தசைகளும் பாதிக்கப்படுவது... போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.
குழந்தை பிறந்து ஆறு மாதத்திலிருந்து இரண்டு வயதிற்குள்ளாக இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு தவழ்ந்து செல்வதில் சிரமம் ஏற்படும். இது நாளடைவில் கடுமையான பாதிப்பை உருவாக்கும். சில பிள்ளைகளுக்கு இரண்டு வயது முதல் 17 வயது வரை இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இவர்களுக்கு கை கால் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, தசை பலவீனமடைகிறது. இவர்களால் ஓடவோ, மாடிப்படி ஏறவோ, நாற்காலியிலிருந்து எழுவதற்கு இயலாத நிலையும் ஏற்படுகிறது. நடப்பதிலும் பாரிய பாதிப்பு உண்டாகும்.
இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுக்கு ரத்த பரிசோதனை, ஈ. எம். ஜி பரிசோதனை, சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை, திசு பரிசோதனை போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிப்பின் தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது.
இவர்களுக்கு கார்போஹைட்ரேட் சத்துகள் குறைவாகவும், புரதசத்து கூடுதலாகவும் இருக்கும் உணவு முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அத்துடன் உடற்பயிற்சியும், கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு அதிக கட்டணத்துடன் கூடிய பிரத்யேக மருந்தை ஊசி மூலம் செலுத்தி இதன் பாதிப்பை கட்டுப்படுத்துகின்றனர்.
டாக்டர். கோட்டீஸ்வரன்.
தொகுப்பு: அனுஷா
Tags: News