அல்காப்டோனூரியா எனப்படும் பாதிப்பை கட்டுப்படுத்தும் உணவு முறை
Posted on 07/06/2022
இன்றைய தேதியில் எம்மில் பலருக்கும் பல அரிய வகை மரபணு மாற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதில் அல்காப்டோனூரியா (Alkaptonuria) எனப்படும் சிறுநீர் கருப்பு வண்ணத்தில் பிரியும் நோயை குறிப்பிடலாம். இத்தகைய பாதிப்பை குணப்படுத்த புதிய சிகிச்சை முறை கண்டறியப்படவில்லை என்றாலும், இதனை கட்டுப்படுத்தக்கூடிய உணவு முறைகளை கண்டறிந்த மருத்துவர்கள் அதனை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்கிறார்கள்.
உலகில் ஒரு மில்லியனுக்கு ஒருவர் என்ற அளவில் அல்காப்டோனூரியா எனப்படும் பாதிப்பு உண்டாகிறது. இத்தகைய பாதிப்பு பாரம்பரிய மரபியல் கோளாறுகளால் ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் அதன் சிறுநீரின் வண்ணத்தை கொண்டே இதனை கண்டறியலாம். வேறு சிலருக்கு இருபது அல்லது முப்பது வயதுகளில் ஓஸ்டியோ ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு வலி, கண்களில் வெண்மையாக இருக்கும் விழி படலத்தில் ஏற்படும் கருப்பு வண்ண மச்சம், தோலில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஏற்படும் நிற மாற்றம், காது குருத்தெலும்பில் ஏதேனும் ஒரு பகுதியில் கருப்பாக தடித்து இருத்தல், சிலருக்கு சிறுநீரகக் கல் மற்றும் புரோஸ்டேட் சுரப்பியில் கல் போன்றவை ஏற்படுவது இதன் அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாம்.
இத்தகைய அறிகுறிகளைக் கண்டவுடன் முறையான மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை புறக்கணித்தால் இதய கோளாறுகள், இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம். மேலும் வேறு சிலருக்கு இதன் காரணமாக உயர் குருதி ரத்த அழுத்த பாதிப்பும் ஏற்படக்கூடும்.
சிறுநீர் பரிசோதனை மற்றும் சிறுநீர் பிரியும் வண்ணத்தை கொண்டு இதன் பாதிப்பின் தன்மையை கண்டறிவார்கள். வேறு சிலருக்கு Gas Chromatography என்ற பரிசோதனையை மேற்கொண்டு, சிறுநீரில் கலந்து இருக்கும் ஹோமோஜென்டிசிக் அமில கூறுகளின் அளவை கண்டறிவார்கள். வேறு சிலருக்கு மரபணு சோதனையும், HGD என்ற பிரத்யேக மரபணுவையும் பரிசோதனை செய்வார்கள்.
விற்றமின் சி குறைபாட்டிற்கான சிகிச்சையையும், பிரத்யேக உணவு முறையை கண்டறிந்து அதனையும் பின்பற்றுமாறு பரிந்துரை செய்வார்கள். இதன்மூலம் இந்த பாதிப்பு நாளடைவில் கட்டுப்படுத்தப்படும்.
டாக்டர். குரு பாலாஜி
தொகுப்பு: அனுஷா
Tags: News