நகரின் நடுவில் நாதியற்ற மனைகள்!
Posted on 06/09/2016
பல மாநகர எல்லைக்குட்பட்ட பல இடங்களில் பல வீடுகளுக்கு நடுவில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதர் மண்டிய பிளாட்டுகள் அப்படியே பல காலமாக விடப்பட்டிருக்கிறது. அங்கு அடர்த்தியான புதர்கள் உருவாகி உள்ளதோடு தேள், பூரான், பாம்பு, பெருச்சாளி ஆகியவற்றின் நீண்டநாள் வாசஸ்தலமாகவும் விளங்குகின்றன. இது மாதிரியான நிலைமை நகரங்களில் பல இடங்களிலும் காணப்படுகின்றன. மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நகரப்பகுதிகளில் இந்த மாதிரியான சுகாதார கேட்டை விளைவிக்கும் அவலங்கள் அனுமதிக்கப்படுவது மிக மிக துரதிர்ஷ்டவசமானது.
சுத்தத்தையும் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் கடைபிடிக்க அறிவுறுத்துகின்ற அரசாங்கம், நகரங்களின் நடுவில் புதர் மண்டிக்கிடக்கின்ற நாதியற்ற பிளாட்டுகளை அடையாளம் கண்டு அவற்றை உடனடியாக சுத்தம் செய்யுமாறு இடத்துக்கு உரியவருக்கு தகுந்த நோட்டீஸ் அனுப்பலாம் அல்லது பொதுநலன் கருதி அந்த பிளாட்டை உடனடியாக சுத்தம் செய்துவிட்டு அதற்கான செலவுத்தொகையை அபராதமாகக்கட்ட நோட்டீஸ் அனுப்பலாம்.
பல லட்சங்கள் கொடுத்து வாங்கும் பிளாட்டுகளை ஏனோ தானோ என்று போட்டு வைப்பது நியாயமா? அருகாமையில் சுற்றிலும் குடியிருக்கும் பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு மேற்படி நடவடிக்கைகளை மாநகராட்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இடத்தின் உரிமையாளர்கள் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்து தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க உறுதுணையாக இருக்கலாமே.
Tags: News, Madurai News