மதுரைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு!
Posted on 08/04/2017
பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழில்களில் சுற்றுலாவும் ஒன்று. ஆனால் நம்முடைய மதுரை, இதன் காரணமாகவும் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்திருக்கிறது. நடந்து முடிந்த நிதியாண்டில் மதுரைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட இருபது லட்சம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மதுரையை மையமாக வைத்து பல்லாயிரம் பயணிகள் தினமும் வருகை தருகின்றனர்.
இதில் வெளிநாட்டு பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா நிறுவனங்கள் மூலம் மதுரை வரும் வடமாநில பயணிகள் மற்றும் ஏனைய பகுதிகளில் வரும் பயணிகள் இங்கிருந்து அதிகமாக ராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கு செல்கின்றனர். கோடை காலத்தில் தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் இருந்துவரும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிகமாகவும், அடுத்ததாக மூணாறுக்கும் செல்கின்றனர். தவிர கோயில்கள் மற்றும் சிறு அருவிகள் நிறைந்த இடங்களுக்கும் விரும்பி செல்கின்றனர்.
மதுரைக்கு கடந்த 2016ம் ஆண்டில் இதுவரையில் இல்லாத வகையில் 1.22 கோடி உள்நாட்டு பயணிகள் மற்றும் 89,448 வெளிநாட்டு பயணிகள் வருகை தந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட கடந்த ஆண்டு 20 லட்சம் அதிகம். இது குறித்து மாவட்ட சுற்றுலாத்துறையினர் தெரிவிக்கும் போது, ‘மதுரையில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதால் பயணிகள், எவ்வித இடையூறும் இன்றி வருகின்றனர். இன்னும் பல வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர வாய்ப்பு உள்ளது,’ என்றனர்.
Tags: News, Madurai News, Art and Culture