மதுரையின் மாபெரும் உணவு தொழிற்நுட்ப கண்காட்சி!
Posted on 23/02/2017
‘உணவு என்பது ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஒன்று. பசிக்கு உண்ட காலம்போய் இன்று ருசிக்கு உண்ணும் காலம் வந்துவிட்டது. பல்லாயிரம் ஆண்டுகளாக மதுரைக்கும் உணவுக்கும் நீண்டநெடும் தொடர்பு இன்றுவரை இருந்துவருகிறது. தொண்டியிலிருந்து மசாலாக்களையும் எகிப்துக்கு அன்றே ஏற்றுமதி செய்த வரலாறு இன்றும் ஏட்டில் இருக்கிறது.
மேலும், அன்றே உணவு பதப்படுத்தும் முறையானது(Food Processing) கையாளப்பட்டது. இதனால் பாண்டிய மன்னர் காலங்களிலே வணிகத்திற்கும் சரி, உணவுப் பொருட்கள் தயார் செய்வதிலும் மதுரை மையமாகவே திகழ்ந்து வந்திருக்கிறது. தற்போது உயர்ந்துவரும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தினால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற உணவுப்பொருள் உற்பத்தி இன்று மறைந்தே போய்விட்டது.
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக மதுரையில் மட்டும் ஏழுபத்தைந்துக்கும் மேற்பட்ட சர்பத் உற்பத்தி நிறுவனங்கள் இருந்தன, இன்றோ விரல்விட்டு எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவேதான் இதுபோன்ற உற்பத்தியாளர்களையும், தொழிலாளர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும் பொதுமக்களிடம் தரமான உள்ளுர் தயாரிப்புகளை கொண்டு போய் சேர்க்க வேண்டுமென்கிற நோக்கிலும் உணவுத் தொழிற்குழு சார்பாக மதுரை தமுக்கம் மைதானத்தில் மடீஸ்சியாவின் புஃட்டெக் 2017 என்னும் உணவு தொழிற்முறை சார்ந்த கண்காட்சியை பிப்ரவரி 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஏற்படுத்தியுள்ளோம்.’ என்கிறார் மடீஸ்சியாவின் உணவு தொழிற்குழுத்தலைவர் திரு. கந்தசாமி அவர்கள்.
இந்த கண்காட்சியைப் பற்றி மேலும் திரு. கந்தசாமி அவர்கள் கூறியதாவது: ‘தற்போது நிலவிவரும் போட்டிகள் மிகுந்த சூழ்நிலையில் சிறு தொழில்கள் செய்வோர் தங்களுக்கென உயரிய தரம் மற்றும் தொழிற்நுட்பத்தை கண்களாக கொண்டு செயல்பட்டால்தான் மக்களின் நன்மதிப்பினையும், வியாபார ரீதியில் லாபத்தையும் ஈட்டிட முடியும். மேலும், இன்று பல இளைஞர்கள் சுயமாக தொழில் துவங்கவேண்டுமென்று முனைப்போடு செயல்பட்டு வருகிறார்கள். அத்தோடு நம்முடைய இந்தியாவின் எதிர்காலமானது இளைஞர்களின் கையில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே, இத்தகைய தொழிற்நுட்ப கண்காட்சியையும் கருத்தரங்குகளையும் முதலில் இளைஞர்களிடம் சேர்க்க வேண்டுமென்பதற்காக புகழ்பெற்ற CFTRI, IICPT, APEDA போன்ற நிறுவனங்களை இணை அமைப்பாளர்களாக கொண்டு பல்வேறு கேட்டரிங் கல்லூரி மற்றும் உணவு தொடர்பாக படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினம் தினம் ஒவ்வொரு தலைப்புகளில் கருத்தரங்குகள் மடீஸ்சியா அரங்கில் நடைபெறும்.
இந்த கண்காட்சியில் பொதுமக்களை கவரும் வகையில் உலகளவில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை முறியடிக்கும் வகையில் சில சாதனைகளை நிகழ்த்த திட்டமிட்டுள்ளோம். அதில் 11 அடியிலான குல்பி, மிகப்பெரிய கொலக்கட்டை, மிகப்பெரிய பிறந்தநாள் கேக் போன்றவற்றையும் இடம்பெறுகின்றன. இத்தோடு குழந்தைகளுக்கான நெருப்பின்றி சமைக்கும் போட்டி, பெண்களுக்கான சமையல் போட்டி, பிரபலமான உணவகங்களில் இருக்கும் செஃப்களுக்கு இடையிலான சமையல் போட்டி, கடோத்கஜன் என்னும் உணவு உண்ணும் போட்டி, பரோட்டா மேன் ஆஃப் மதுரை என்னும் பட்டத்தைக் கொண்டு சிறப்பான பரோட்டா மாஸ்டர் போட்டியையும் நடத்தவுள்ளோம். இதில் வெற்றி பெறுவோருக்கு சிறப்பான பரிசுகளை வழங்கவுள்ளோம்.’ என கூறினார்.
இந்த தொழிற்குழுவின் துணைத் தலைவர்களாக திரு. சம்பத் அவர்களும், திரு. குணசேகரன் அவர்களும் செயலாற்றுகிறார்கள். ஆலோசகர்களாக பார்ஃசூன் பாண்டியன் ஹோட்டலின் இயக்குநர் திரு.வாசுதேவன் அவர்கள், டெம்பிள் சிட்டி இயக்குநர் திரு. குமார் அவர்கள், பெரீஸ் பிஸ்கெட்ஸின் இயக்குநர் முனைவர் மஹேந்திர வேல், எஸ்.என்.பி. டைரி மில்கின் இயக்குநர் திரு. ராஜேந்திர பாபு, பிரிட்டிஷ் பேக்கரியின் இயக்குநர் திரு. பாலசுந்தரம் அவர்களும் இணைந்து செயல்படுகின்றார்கள்.
இந்த கண்காட்சி வரும் 24ம் தேதி உணவுப் பற்றிய சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணியோடு துவங்குகிறது. இதை மதுரை மாவட்ட ஆட்சியர் காந்தி மியூசியத்தில் துவக்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து கண்காட்சியைத் துவக்கி வைக்க CFTRI-யின் இயக்குநர் திரு. ராம் ராஜசேகர் அவர்கள் சிறப்புரையாற்ற IICPT-யின் இயக்குநர் முனைவர் அனந்த கிருஷ்ணன் அவர்கள், தலைமையுரையாற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவ ராவ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்கள்.
Tags: News, Madurai News, Art and Culture