ஸ்ரீவி. பல்கலையில் “தொழிலாளர் நலம் மற்றும் பாதுகாப்பு” பயிற்சிப் பட்டறை!
Posted on 17/02/2017
ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் இயந்திரவியல் துறை தொழிற்சாலை பாதுகாப்பு பொறியாளர்கள் குழுமம் சார்பில் தொழிலாளர் நலம் மற்றும் பாதுகாப்பு பற்றிய 2 நாள் பயிற்சிப்பட்டறை பல்கலை இயக்குநர் முனைவர் எஸ். சுசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
இயந்திரவியல் துறை தலைவர் முனைவர் ஜெ . டி. வினோலின் ஜேப்ஸ் வரவேற்புரை வழங்கினார். துணைவேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர், பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன், பேராசிரியர் முனைவர் எஸ். பத்ரிநாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தொழிற்சாலை பாதுகாப்பு இணை இயக்குநர் கே. சிதம்பரநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயிற்சிப்பட்டறையை துவக்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், குறிப்பாக தொழிற்சாலை தீ விபத்துக்கள் தற்பொழுது சிவகாசி, சாத்தூர், விருதுநகர் வட்டாரங்களில் நிகழ்கின்றன. பட்டாசு ஆலைகள் தொடங்குவதற்கு முதலாவதாக சல்பர் உரிமம் மாவட்ட ஆட்சியரிடமிருந்தும், இரண்டாவதாக பெசோ உரிமம் தொழிற்சாலை ஆய்வாளர்களிடமிருந்தும் பெற்று, பாதுகாப்பு அமைப்பிற்கு இயக்குநர் அலுவலகத்திலும் அனுமதி பெறவேண்டும். முன்பு 1000 பேருக்கு ஒரு நபர் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்படவேண்டும் என்ற விதி மாறி தற்பொழுது 50 தொழிலாளருக்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி நியமிக்க வேண்டும் என்ற விதி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
விதிகளை அமுல்படுத்துவதற்கு முன்பும், தொழிலாளர்கள் வேலையை துவங்குவதற்கும் முன்பும் தினமும் தொழிலாளர்களுக்கு, கீழ் இருந்து மேல் அதிகாரிகள் வரை பாதுகாப்பு முறைகள் பற்றி எச்சரிக்கையுடன் வழிநடத்தி அறிவுரை கூறினால்தான் விபத்தை தடுக்கமுடியும். எதிர்பாராத விபத்தும் தடுப்பதற்கு பட்டாசுகளை இருப்பு வைக்கும் இடங்களை பாதுகாப்பாக வைத்து தொழிலாளர் அருகில் உடனுக்குடன் உற்பத்தியை எடுத்துவிட வேண்டும் என்று கூறினார்.
மேலும், ஒவ்வொரு தடவையும் வெடி விபத்துக்களில் விபத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு 2 அல்லது 3 பேர் இருப்பார்கள் ஆனால் அதனைப்பார்த்து அதன் ஒலி அதிர்வினால் திகைத்து மாரடைப்பினால் 40 பேருக்கு மேல் உயிரிழக்கிறார்கள் என மருத்துவக் குறிப்பு கூறுவதாகவும் விளக்கினார்.
சென்னை தொழிற்சாலை ஆய்வாளர் (ஓய்வு) பி. ஜனார்த்தனன், சென்னை தொழிற்சாலை பாதுகாப்பு குழும பொறியாளர்கள் தலைவர் எஸ். உலகநாதன், இந்திய தொழிற்சாலை பாதுகாப்ப குழுமம் உறுப்பினர் என். ஜெயச்சந்திரன் ஆகியோர் தொழிலாளர் நலன், மற்றும் பாதுகாப்ப பயிற்சிகள், தொழிற்சாலை சட்டங்கள், பாதுகாப்பு அதிகாரிகள் தரவேண்டிய பயிற்சிகள், பல தொழிற்சாலைகளில் நடைபெற்ற விபத்துக்கள், காரணங்கள் பற்றிய ஒலி ஒளி காட்சி பற்றி விவரித்து மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி வழங்கினர்.
அனைத்து துறை பி. டெக் மாணவர்கள் 300 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். சென்னையிலுள்ள இந்திய பாதுகாப்பு பொறியாளர்கள் குழுமம் உறுப்பினர்கள், இயந்திரவியல் துறை தொழிற்சாலை பாதுகாப்பு முதுநிலைப்படிப்பு துறை மாணவர்கள் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பேராசிரியர் டி. ராஜ் பிரதிஸ் நன்றி கூறினார்.
Tags: News, Lifestyle, Academy, Education