பட்டு நூல் ஆபரணங்களோடு கலக்கும் ரூபினா!
Posted on 06/01/2017
‘ஒவ்வொரு நாளும் பேஃஷன் முன்னேறிக் கொண்டே தான் இருக்கு. இன்னைக்கு தலைமுறை பெண்கள் என்ன தான் மார்டன் ட்ரெஸின் மீது அதிகம் விருப்பம் கொண்டிருந்தாலும், வீட்டில் ஏதாவது விஷேசம் நடந்தால் சட்டென அழகு தேவதைகளாய் சேலைக்கோ அல்லது வட இந்தியப் பாரம்பரிய ஆடைக்கோ மாறிவிடுவார்கள். சரி அது மட்டும் போதுமா? பெண்ணழகிற்கு பேரழகாய் திகழ்வது ஆபரணங்கள் தானே..’ என்கிறார் திருமதி. ரூபினா.
பட்டு நூலால் ஆபரணங்கள் அணிவது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பதாகவே சீனாவில் தொடங்கி விட்டது. அன்றைய சூழலில் பட்டுப்பூச்சியை சீனர்கள் வளர்த்து அதிலிருந்து பட்டுநூல் எடுத்து ஆபரணங்களை தயார் செய்தனர். சரி, இன்றைய காலத்திற்கு வருவோம். என்னதான் பல ஆயிரங்கள் செலுத்தி தங்கமோ, வெள்ளியோ ஏன் வைரமோ வாங்கி அணிந்தாலும் ஆடைக்கு ஏற்ற வண்ணத்தினால் ஆன ஆபரணங்களை அணிவதே பேரழகு தானே. இன்று, உலகத்தின் வாசலாய் இணையதளம் இன்று பல வியாபாரங்களை வளர்த்து விடுகிறது.
அந்த வகையில் தற்போது பேஸ்புக், வாட்ஸ் அஃப்பில் ஜாஸியா கிரியே ஷன்ஸ் என்னும் தம்முடைய தொழிலை முதல் கட்டமாக துவங்கி, இன்று சிறப்பாக நகைகளை உருவாக்குவதோடு, வகுப்புகளையும் நடத்தி வருகிறார். திருமதி ரூபினா அவர்கள்: ‘கலை என்று வந்துவிட்டாலே, கிரியேட்டிவிட்டி தான் எல்லாம். எந்த ஒரு தொழிலிலும் நமக்கென ஒரு தனித்துவத்தை பதிக்கும் போது நம்முடைய அங்கீகாரம் வெளிப்படும்.
இன்று பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு பின் ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டுமென்ற கனவோடு இருக்கிறார்கள். அந்த கனவு நனவாகும் ஒரு வழியாக இந்த நகை தயாரிப்பு இருந்து வருகிறது. எனக்கு ஆபரணங்களின் மேல் சிறு வயதின் முதலாய் எப்போதும் விருப்பம் இருக்கும். எனவே திருமணத்திற்கு பின், ஏதாவது கைத்தொழில் பழகலாமா என்கிற எண்ணத்தோடு யூட்யூபின் பக்கம் வலம் வந்தேன். அப்போதுதான் சில்க் திரெட் நகைகளின் செய்முறைகளை பார்த்து, அதின்மீது ஆர்வம் ஏற்பட்டு அதை கற்றுக்கொண்டேன். அதில் எனக்கென ஒரு தனித்துவம் ஏற்படுத்த கஸ்டமைசெஷன் முறையை பின்பற்றினேன்.
அதாவது வாடிக்கையாளரின் ஆடையைப் பொருத்து அதற்கு சரியாக அமையும் தோடு, வளையல், டெரக்கோட்டா பென்டன்ட் கொண்ட நெக்லஸ் என செட்டாக வடிவமைப்பதுதான். இது மக்களிலிருந்து மணப்பெண் வரை கவர்ந்தது. இன்று பல திருமணத்திற்கு ஆபரணங்களை வடிவமைக்கிறேன். அதனைத் தொடர்ந்து சிறுமிகளுக்கு ஹேர்- பேண்ட், கிளிப்ஸ், வளையல்கள் போன்றவற்றையும் தயார் செய்கிறேன். இது வீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டுமென்று நினைக்கும் பெண்களுக்கு நல்ல வருவாய் ஈட்டித் தரும் ஒரு தொழில். இதில் திறமையை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயம் இந்த தொழிலில் வெற்றியை அடையலாம். பலரும் இதனைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களுக்கு கென ஒரு வார கால வகுப்புகளை நடத்துகிறேன். வகுப்பில் கலந்து சிறப்பாக தயாரிக்கப்படும் நகைகளை விற்றும் கொடுக்கிறேன்.’ என கூறினார்.
தொடர்புக்கு: 9791331222
www.facebook.com/Jazihacreationz
Tags: News, Lifestyle, Art and Culture