மதுரையின் முதன்மை “கீ போர்ட்” வல்லுனர் சத்தியமூர்த்தி!
Posted on 27/01/2017
“கீ போர்ட்” வாசிப்பதில் முதன்மை பெற்று விளங்கும் மதுரையின் திரு.சி.சத்தியமூர்த்தி அவர்களை அட்வென்சர் இதழுக்காக சந்தித்து உரையாடினோம்.
மாணவர்களுக்கு இசைக்கற்றலில் ஆர்வத்தை எவ்வாறு உருவாக்குவது?
முக்கியமாக கீ போர்ட் வாசிப்பதில் இரண்டு மூன்று கிரேடுகள் தேர்வு ஆன பின்பும் கூட அவர்களுக்கு பிடித்தமான ஒரு சினிமா பாடலை வாசிப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர் கொள்கிறார்கள் மாணவர்கள். எனவே அவர்களுக்கு பிடித்தமான சினிமா பாடலை கீ போர்ட் மூலமாக வாசிப்பதற்கு சிறப்பாக பயிற்சி அளித்தாலே அவர்களின் இசைக்கருவியின் மீதான ஆர்வம் பன்மடங்கு கூடிவிடும்.
கர்நாடக இசைக் கருவிகளை இயக்குவதற்கு தாங்கள் எவ்விதமான பயிற்சி எடுத்துக்கொண்டீர்கள்?
சிறுவயது முதலே இசைக்கருவிகளை இயக்கி வாசிப்பதில் எனக்கு தணியாததொரு விருப்பம் இருந்து கொண்டேயிருந்தது. கர்நாடக சங்கீதம் தொடர்பான இசைக்கருவிகளை கையாள்வதற்கு நான் முறையான நான்கு வருட பயிற்சியை எனது குருவான திரு.வெங்கடாசலம் அவர்களிடம் கற்றுக்கொண்டேன். இந்த நான்கு வருடக் காலத்தில் ஹார்மோனியம், சில ஒத்து வாத்தியங்கள் மற்றும் வாய்ப்பாட்டு ஆகியவற்றிற்கான தொடர்பயிற்சிகளை எடுத்துக்கொண்டேன்.
கர்நாடக இசைக்கருவிகளோடு நிறுத்திக் கொள்ளாமல் எப்படி மேற்கத்திய வாத்தியங்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு ஏற்பட்டது?
சிறுவயது முதலே எனக்கிருந்த இசைக்கருவிகள் மீதான தொடர் ஆர்வத்தின் காரணமாக, கர்நாடக இசை கருவிகளை மீட்பதற்கு, கற்பதோடு நின்றால் ஏதோ ஒரு குறை இருந்துகொண்டே இருப்பதைப்போல நான் உணர்ந்தேன். இன்னும் சொல்லப்போனால் இரண்டு இசைகளின், அதாவது கர்நாடக மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகளின் சங்கமமே காலத்திற்கேற்ற அற்புதமான இசையை உருவாக்க முடியும் என்று நம்பினேன். அதில் நான் வெற்றியும் பெற்றுவிட்டேன்.
மேற்கத்திய இசைக்கருவிகளை தாங்கள் யாரிடம் எவ்வளவு காலத்திற்கு பயிற்சி மூலம் கற்றுக்கொண்டீர்கள்?
மதுரை வீட்டுவசதி வாரியத்தில் குடியிருந்த திரு.ராம் அவர்களை குருவாகக் கொண்டு முறையாக மேற்கத்திய இசைகளை கற்றுக்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டேன். திரு.ராம் அவர்கள் அளித்த உன்னதமான பயிற்சியின் மூலமாக நான் முதலில் பியானோ வாசிப்பதில் வல்லுனராக உருவெடுத்தேன். கீ போர்ட் இசைக்கருவிகளை சிறப்பாக வாசிப்பதற்கு, நான் பியானோவில் பெற்ற பயிற்சியானது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. அத்துடன் பியானோ வாசிப்பதில் ஒரு குறிப்பிட்ட திறமையை அடைந்துவிட்டால், இதுவே இதர கீபோர்ட் வாத்தியங்களை வாசிப்பதற்கு அடித்தளமாக அமையும் என்றும் புரிந்துகொண்டேன்.
இதுவரை தாங்கள் எத்தனை இசைக்கருவி விற்பனர்களை உருவாக்கியிருக்கிறீர்கள்?
கர்நாடக மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகளை சுமார் 100 மாணவர்களுக்கு நான் இதுவரை சிறப்பாகவும் குறையில்லாமலும் கற்றுக் கொடுத்திருக்கின்றேன். மதுரையின் தலைச் சிறந்த கீ போர்ட் வாசிப்பாளர் என்ற முறையில் நான் கீ போர்ட் பயிற்சியளிக்கும்போது மிகுந்த நம்பிக்கையுடனும் அப்பழுக்கற்ற விதத்திலும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றேன். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மாணவர்கள் கல்வியோடு ஏதாவது ஒரு இசைக்கருவியை இயக்குவதற்கு கற்றுக்கொண்டு விட்டால், அவர்களின் நேரம் வீணடிக்கப்படமாட்டாது, ஓய்வு நேரங்கள் அத்தனையும் மிகப் பொருத்தமான முறையில் இசைக் கருவிகளை மீட்டுவதில் பயன்படுத்தப்படும், அத்துடன் மாணவர்களின் இந்த பழக்கமானது மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கும் என்பதும் நிரூபணமாகி உள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கீ போர்ட், கிட்டார் போன்ற இசைக் கருவிகளில் பயிற்சி அளித்திட எவ்வளவு காலம் தேவைப்படும், எவ்வளவு பணம் கட்டணமாக செலுத்தப்பட வேண்டியிருக்கும் என்ற விபரங்களைச் சொல்லுங்கள்?
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மொத்தமாகவும் தனியாகவும் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று நான் பயிற்சியை அளிக்க முடியும். ஒரு பாடலை தானே கீ போர்ட் மூலமாக வாசிக்கும் அளவிற்கு சொல்லிக்கொடுப்பது தான் இதில் முழுமையான பயிற்சியாகும். ஒரு ஆர்வமுள்ள மாணவர் கீ போர்ட் பயிற்சியை மூன்று மாதங்களுக்கு உட்பட்டும் கற்றுக்கொள்ளலாம்.
கட்டண விகிதங்களைப் பொறுத்தளவில் கற்றுக்கொள்பவர் எத்தனை காலம் எடுத்துக் கொள்வார், அவருக்கு முன் அனுபவம் இருக்கிறதா, அவருடைய ஆர்வம், அவருடைய ஈடுபாடு ஆகியவற்றை கருத்தில்கொண்டே கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள மாணவர்கள் என்னை நேரில் சந்தித்து பயிற்சிக்காலம், கட்டண விகிதங்கள் முதலியவற்றை தெரிந்து கொள்ளலாம். பயிற்சி எடுக்க வரும் மாணவர்கள், பயிற்சிக்கு தேவைப்படும் “டிரெயினர்ஸ் கீ போர்ட்” கொண்டு வருவது மிகமிக அவசியமாகும்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
Tags: News, Lifestyle, Art and Culture