ஆண் கலைஞரின் பரவசமூட்டும் பரதநாட்டியம்!
Posted on 08/10/2016
பரதநாட்டியம் நம் பாரத்தின் நாட்டியம் என்று தான் சொல்ல வேண்டும். பாவம், ராகம், தாளம் இவை மூன்றும் ஒருசேர விளங்கும் நடனம் இன்று உலகளவில் உள்ள தமிழர்களும் சரி, உலக மக்களும் சரி பரதநாட்டியத்தை தங்களின் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதிற்கு அதிகமான ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.
ஆனால், உலகளவில் பலரும் ஆர்வம் காட்டி வந்தாலும், பெரும்பாலும் பெண்களே பரதநாட்டியம் புரிகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அதில் மாற்றம் ஏற்படும் வகையில், திருமதி. சாந்தினி அருணகிரி அவர்களின் மாணவராக திகழ்ந்து, மதுரையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மகாத்மா பள்ளியில் நடன ஆசிரியராக பணியாற்றிவருகிறார் திரு. காளிதாஸ் அவர்கள்.
நடனத்தின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட ஆர்வம், மற்றும் பரதநாட்டியம் தன்னுடைய வாழ்க்கையானது எப்படி என்பதை அறிந்துக்கொள்ள அவரை சந்தித்தோம்.
'மிகவும் எளிமையான குடும்பத்திலிருந்து வந்த எனக்கு, என்னுடைய 14ம் வயது வரை எனக்கு பரதம் பற்றி எந்த ஒரு விஷயமும் தெரியாது. ஆனால், என்னுடைய பள்ளி பருவம் முதல் எனக்கு பொதுவாகவே நடனம் என்பது மீது ஒருவிதமான ஈர்ப்பு இருந்துக்கொண்டே இருந்தது. எந்த ஒரு சூழலிலும், மற்றவர்கள் முன்னிலையில் நான் நடனம் ஆட வெக்கப்பட்டதே இல்லை.
என்னுடைய 14ம் வயதில், வீட்டின் அருகில் ஒரு விழா ஒன்று நடைபெற்றது. அதில் நான் பங்கேற்று, இசைக்கேற்ப ஆடினேன். அதில் அசந்தப்போன பலர் எனக்குள் இருந்த நடத்த திறமையைக் கண்டு பாராட்டினர். பலரின் பாராட்டுதலுக்கு மத்தியில் என்னுடைய வீட்டிற்கு அருகில் இருந்த திருமதி. மீனாட்சி என்பவர் என் நடத்தைக் கண்டு அசந்துப்போய் திருமதி. சாந்தினி அருணகிரி அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். இது தான் என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாகவும் அமைந்திருந்தது.
அவர்களின் நடனத்திறன் மற்றும் நயத்தைக் கண்டு, பரதநாட்டியத்தின் மீதான ஆர்வம் எனக்குள் துளிர்விட்டது. ஆனால், அச்சமயத்தில் திருமதி. சாந்தினி அருணகிரி அவர்கள் யாருக்கும் வகுப்பு எடுத்தில்லை என்பதால் என்னை மாணவனாக ஏற்றுக்கொள்ள தயங்கினார். பின் என்னுள் இருந்த ஆர்வத்தைக் கண்டு, பல இக்கட்டுகளுக்கு மத்தியில் என்னை தன் மாணவனாக ஏற்றுக் கொண்டார்.
அவர்களின் வழியில் பரதநாட்டியத்தைக் கற்றுக்கொள்ளத் தொடங்கிய சில காலங்களில் நாட்டிய விஷ்வ சார்தா என்னும் பட்டப்படிப்பினை முடித்தேன். அதனைத் தொடர்ந்து, இசைக் கல்லூரியிலும், பின், 1992ல் மதுரையின் பிரபல கரகாட்ட கலைஞர் வேலு அவர்களிடம் கரகாட்டம், ஒயிலாட்டம், காவடி, சிலம்பம், தேவராட்டம், தீப்பந்தம், என நாட்டுப்புறக்கலைகளையும் கற்றுக்கொண்டேன்.
நடனக் கலையை நன்கு கற்றுத் தேறிய நான், வாழ்வின் அடுத்த படியை நோக்கி நகர்தேன். 1990-2000 வரை மதுரையில் கோவில்களிலும், திருவிழாகளிலுமே அதிகளவில் நடனம் புரிந்து வந்தேன். ஆனால், இது என்னுடன் முடிந்துவிடக் கூடாது, நமக்கு தெரிந்த ஒரு கலையை கறபிப்பதே நாம் கற்ற கலைக்கு நாம் கொடுக்கும் குருதட்சணை. அச்சமயத்தில் தான் என்னுடைய குரு திருமதி. சாந்தினி அருணகிரி அவர்களின் மூலம், மதுரையின் கலாஷேத்ரம் என்றழைக்கப்படும் மகாத்மா பள்ளியில் அவர்ளோடு இணைந்து துணை நடன ஆசிரியராக 10 ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது.
பின், அப்பள்ளியிலே நல்லாசிரியர் விருது பெற்ற நான், மகாத்மா பள்ளியின் பாபா பில்டிங்கிற்கு முதன்மை நடன ஆசிரியராக பதவி உயர்வு அளிக்கப்படும் இன்று வரை பல மாணவ மாணவியருக்கு வகுப்புகள் நடத்தி வருகிறேன்.' என கூறினார்.
மதுரையிலே அதிகப்பேரால் அறியப்படும் ஆண் பரதநாட்டியக் கலைஞர் திரு. காளிதாஸ் அவர்களைப் போல அவர்களின் புதல்வி செல்வி. சிவ ப்ரியதர்ஷினி இன்று, வீட்டிலேயே தந்தையோடு இணைந்து பரதநாட்டியத்தை பயிற்றுவிக்கிறார்.
தொடர்புக்கு: 0452-4393119
Tags: News, Lifestyle, Art and Culture