கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
Posted on 15/04/2022
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடி வழியாக கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. சுங்கக்கட்டணம் வசூலில் இந்தியாவில் முதன்மை வகிக்கும் இந்த சுங்கசாவடியை வார இறுதி நாட்களில் கடப்பது மிகவும் சிரமமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் சுற்றுலாவுக்கும் சென்று வருகின்றனர். இதன் காரணமாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக அணிவகுத்து நிற்பதால் சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்கு நீண்ட நேரமாக ஆவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
Tags: News