வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து!
Posted on 31/03/2022
வன்னியருக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், வன்னியருக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு செல்லாது என்று உத்தரவிட்டுள்ளது. வன்னியருக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது செல்லும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தும் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில், வன்னியருக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர் உள்ளிட்ட சில சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை இரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
எந்த ஒரு பிரிவினருக்கும் உள்ஓதுக்கீடு வழங்கிட மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், இயத சிறப்பு ஒதுக்கீட்டிற்கு அடிப்படையான தரவுகள் சரியாக இல்லை என்றும், இதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரியதுரைகள் சரியான ஆதாரங்களின்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டு வந்த, அருந்ததியினர் மற்றும் இஸ்லாமியருக்கான உள்ஒதுக்கீட்டு முறைகள் அனைத்திற்கும் சரியான ஆதாரங்களின் அடிப்படையில் சட்டங்கள் முறையாக இயற்றப்பட்டதால், அனைத்து நீதிமன்றங்களாலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ்நாட்டில் சமூகநீதி நிலைநாட்டப்பட்டுள்ளதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில், தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அவசர கோலத்தில் அள்ளித்தெளித்தது போல சரியான அடிப்படைத் தரவுகள் இன்றி இந்த சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதால்தான் உச்ச நீதிமன்றத்தால் இச்சட்டம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.
முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியபடி, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, இயத வழக்கு தொடர்பாக அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு முழுமூச்சுடன் மேற்கொண்டும், இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்ததச் சூழ்நிலையில், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடம் தீவிரமாக கலந்தாலோசித்து தமிழக அரசு முடிவு எடுக்கும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags: News