மேயராகும் ஆட்டோ ஓட்டுநர்!
Posted on 05/03/2022
புதிதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக ஆட்டோ ஓட்டுநர் சரவணன் பதவியேற்க உள்ளார்.
கும்பகோணம் மாகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 42 வார்டுகளில் வெற்றி பெற்றன. இதில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு மூன்று வார்டுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இருவர் வெற்றி பெற்றனர். இரு இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 17வது வார்டில் வெற்றி பெற்ற கே.சரவணன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எளிய குடும்பத்தை சேர்ந்த சரவணன், 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். கும்பகோணம் 17வது வார்டில் உள்ள துக்காம்பாளையம் தெருவில் மனைவி மற்றும் 3 மகன்களுடன் வாடகை வீட்டில் சரவணன் வசித்து வருகிறார்.பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த சரவணன், தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார். தற்போது, மாநகர துணை தலைவராக செயலாற்றி வருகிறார். 13 ஆண்டுகளாக வாடகை ஆட்டோ ஓட்டி வந்த சரவணன், கடந்த 7 வருடங்களாகத்தான் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார்.
எளிய பின்னணியில் இருந்து வந்த சரவணன், மாநகராட்சி மக்களின் கோரிக்கைகள் என்ன என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருப்பதால், மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு, பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை தந்து மக்களின் எதிர்பார்ப்புகளை விரைவாக நிறைவேற்றி தருவார் என மக்கள் பெரிதும் நம்புகின்றனர்.
Tags: News